நாளை நடக்கும் நிதி ஆயோக் கூட்டம்.. 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய்..
CM Vijay Delhi Visit: சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விஜய், நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு தேவையான நிதி, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 10, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய்:
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விஜய், நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு தேவையான நிதி, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பாசிசத்தின் மற்றொரு Version.. ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் சோபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..
மேலும், இந்த டெல்லி பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வராக ஒரு மாத காலம்:
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்று இன்றுடன் ஒரு மாத காலம் நிறைவடைகிறது. இந்த ஒரு மாத காலத்தில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எதிர்க்கட்சித் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது வரை முதலமைச்சர் விஜய் எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..
கடந்த முறை டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழகத்திற்கு தேவையான மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். அப்போது, அந்த பயணத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான நேரம் ஒதுக்கப்படாததால் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு:
இதனால், தற்போது 3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், தேசிய கட்சித் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 12ஆம் தேதி மாலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சென்னை திரும்ப உள்ளார்.