காக்கி உடையில் ஒரு காமுகன்.. புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தூத்துக்குடி காவலர் சஸ்பெண்ட்!
Arumuganeri Constable Suspended : ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக தலைமை காவலர் அக்னி முத்துவை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்கு தொடர்பாக பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது, பணியில் இருந்த தலைமை காவலர் அக்னி முத்து அந்த பெண்ணிடம் புகார் தொடர்பான விவரங்களை பெற்றுள்ளார். அத்துடன், புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணையும் கேட்டு பெற்றுள்ளார். இதை தொடர்ந்து, அந்த பெண்ணின் செல்போனுக்கு தலைமை காவலர் அக்னி முத்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவரது பேச்சில் தவறான எண்ணம் தெரிந்த அந்த பெண் அக்னி முத்துவுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால், அதையும் மீறி அந்த பெண்ணுக்கு தலைமை காவலர் அக்னி முத்து தொடர்ந்து போன் செய்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் புகார்
இந்த நிலையில், அந்த பெண்ணின் செல்போன் வாட்ஸ் ஆப்-க்கு தலைமை காவலர் அக்னி முத்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தலைமை காவலர் அக்னி முத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய ஆபாச மெசேஜ் உள்ளிட்ட ஆதாரங்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் அந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தூத்துக்குடி எஸ் பி துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி




தலைமை காவலர் அதிரடி சஸ்பெண்ட்
அதன் அடிப்படையில், தலைமை காவலர் அக்னி முத்து மீதான துறை விசாரணை நடைபெற்றது. இதில், புகார் அளிக்க வந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று அவருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புகாருக்குள்ளான தலைமை காவலர் அக்னி முத்துவை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி எஸ்பி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இதே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திலீபன் என்பவர் சக பெண் காவலருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், அப்போதைய நெல்லை சரக டிஐஜியாக இருந்த தேஷ்முக் சஞ்சய், இன்ஸ்பெக்டர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “நாங்க மாற்றத்தை கொண்டு வருவோம்-னு சொல்றாங்க”.. இதைவிட என்ன மாற்றம் வேணும்?.. ஆ.ராசா பளீர்!