கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ வலையில் கூடுதல் எஸ்.பி.- டி.எஸ்.பி.. அதிரடி விசாரணையால் பரபரப்பு!
Karur Incident CBI Questioned ASP : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சி. பி. ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரிடம் 3- ஆவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய் கடந்த 2015- ஆம் ஆண்டு செப்டம்பர் 27- ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல் இருந்தனர். தற்போது, தேர்தல் பரபரப்பு முடிவடைந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கல் காவல் ஆய்வாளர் சையத் அலி, கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, நெரிசல் சம்பவம் நிகழ்ந்த போது, கரூர் பசுபதி பாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கூடுதல் எஸ்.பி.யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேமனந்தத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி அவர், இன்று சனிக்கிழமை ( ஜூன் 13) சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினார். இதே போல, டிஎஸ்பி செல்வராஜூம் விசாரணைக்கு ஆஜராகினார். இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். கரூரில் பொதுப் பணித் துறை அலுவலகத்திற்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!




உள்ளூர் போலீசாரிடம் இருந்து சிபிஐ-க்கு மாறிய வழக்கு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. மேலும், அப்போதைய திமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்றது.
சிபிஐ விசாரணையை மேற்பார்வை செய்யும் ஓய்வு நீதிபதி
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை தமிழக வெற்றி கழகம் நாடிய நிலையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிஐயின் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி