கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
Alandur TVK Secretary Dismissed: சென்னை பரங்கிமலையில் கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றிக் கழக செயலர் வேம்புலி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான நடவடிக்கையை சென்னை புறநகர் மாவட்ட செயலர் சரவணன் எடுத்துள்ளார்.
சென்னை, பரங்கிமலை பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இவரின் ஆலந்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றி கழக கட்சியின் செயலாளர் வேம்புலி என்பவர் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆலந்தூர் வடக்கு பகுதி செயலர் வேம்புலியை நீக்குவதாக சென்னை புறநகர் தவெக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெகவில் இருந்து ஆலந்தூர் வடக்கு செயலர் நீக்கம்
சென்னை புறநகர் மாவட்ட பகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆலந்தூர் வடக்கு பகுதி கழக செயலாளராக வேம்புலி என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். அவர், சமீபகாலமாக கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு முரணான வகையில் ஈடுபட்டதாலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறார்.




வேம்புலிக்கும் தவெகவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது
எனவே, வேம்புலிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதனால், கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருடன் தொடர்பில் இருக்கக் கூடாது. மேலும், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கொடி, சின்னம் மற்றும் நிர்வாக பொறுப்புகள் ஆகியவற்றை எந்த வகையிலும் வேம்புலி பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும், அவரால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும், தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்காது.
வேம்புலியுடன் கட்சி ரீதியாக தொடர்பில் இருக்கக் கூடாது
கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் வேம்புலியுடன் கட்சி சார்ந்த எந்த விதமான தொடர்பும் வைக்க கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்ணுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பாலியல் சீண்டல் தொல்லை அளித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!