நிபா வைரஸ் பரவல்.. கேரளம் – தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!
Nipah Virus Precaution: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, தமிழக எல்லையில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவரப்படுத்தி உள்ளனர். இதனால், கேரளத்தில் இருந்து வரும் மக்களை சோதனை செய்த பின்னரே தமிழகத்துக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்த சுமார் 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகத்தில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளம்- தமிழ்நாடு எல்லையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் முக கவசம் அணிந்தவாறு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அதில் பயணிக்கும் நபர்களிடம் காய்ச்சல் தொற்று மற்றும் நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனை மேற்கொள்கின்றனர். இதன் பின்னரே, அவர்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முதல் முறையாக கண்டறியப்பட்ட நிபா தொற்று
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புறம் பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று முதல் முதலாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த தொட்டில் 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட சோதனைகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அடிப்படையில், இவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: நான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா? நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கேள்வி!
ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் 9 பேர் பாதிப்பு
இதைத் தொடர்ந்து, அவருக்கு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் தோற்றம் பரவி வருகிறது. இந்த தொற்றால் வயநாடு பகுதியில் ஒரு பள்ளி மாணவி பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையின் அடிப்படையில் தெரிய வந்தது. தற்போது, இந்த மாணவியுடன் சேர்த்து சுமார் 9 பேர் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிபா வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது
இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 514 மாணவ, மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வவ்வால் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து நிஃபா வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது. இதில், வவ்வால் எச்சம் அல்லது உமிழ் நீர் பட்ட பழங்கள் ஆகியவற்றை மனிதர்கள் தெரியாமல் உட்கொண்டாலோ அல்லது வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பன்றிகள், குதிரைகள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் மூலமும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.
நிபா வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகள்
- அதிக காய்ச்சல் மற்றும் அதிகமான தலைவலி.
- தசை வலி மற்றும் தொண்டை வலி.
- மயக்கம் மற்றும் வாந்தி, மனக்குழப்பம்.
- மூச்சு திணறல் மற்றும் கடுமையான பாதிப்பால் கோமா நிலை.
ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
மேலும் படிக்க: கால்பந்து விளையாடியபோது துயரம்.. மைதானத்திலேயே மயங்கி விழுந்து மாணவர் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை!