அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!
Government Hospitals Outpatient Slips: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செல்போன் செயலி வாயிலாக வெளிப்புற நோயாளிகள் சீட்டை பெற்று குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெறும் திட்டத்தை ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலை புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து வெளி நோயாளிகள் சீட்டை பெற்று விட்டு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட வரிசையில் கால் கடுக்க வெகு நேரம் காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது. இதனால், வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவு காணப்படுவதாகவும், மருத்துவமனையின் வெளிப்பகுதிகளில் அதிக அளவு கூட்டம் காணப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருவோருக்கு செல்போன் செயலி மூலமாக ஓபி சீட்டு வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தினமும் 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்
இது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. இதில். திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களில் சென்னை ஸ்டான்லி அரச மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் குமார் 3 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் படிக்க: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தியது என்ன? முழு விவரம் உள்ளே!




செல்போன் செயலி வாயிலாக ஓபி சீட்டு பெறும் முறை
அவ்வாறு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து வெளிப்புற நோயாளிகள் சீட்டை பெறும் நிலை உள்ளது. அதுவும் வெயில் மற்றும் மழை காலங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் முன்னதாகவே முன்பதிவு செய்து சிகிச்சை பெறுவது போல, அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு செய்து சிகிச்சை பெறும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
செயல்பாட்டுக்கு வருகிறது செல்போன் செயலி ஓபி சீட்டு முறை
அதன்படி, செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்துவிட்டு 8 முதல் 8:30 மணிக்குள் அல்லது 9 மணி முதல் 9:30 மணிக்குள் என ஒரு நேரத்தை தேர்வு செய்து செல்போன் செய்தியில் ஆதார் எண்ணை பயன்படுத்தி முன்பதிவு செய்து சிகிச்சை பெறுவதற்கான ஒரு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் வெளிப்புற நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் குறைந்த நேரத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப வசதியாக இருக்கும் இந்த சட்டத்தை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.
மேலும் படிக்க: தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்… ராஜ்யசபா புதிய எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி!