சென்னையில் கல்லால் அடித்து தொழிலாளி கொடூர கொலை… பெயிண்டர் அதிரடி கைது!
Chennai Crime : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கட்டட தொழிலாளியை செங்கலால் தாக்கி பெயிண்டர் கொலை செய்தார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், புலியூரை சேர்ந்தவர் தேவன் ( 45 வயது). இவர், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இரவு நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோவில் வாசலில் படுத்து தூங்கி வந்தார். இதேபோல, பூந்தமல்லி சேர்ந்த பெயிண்டர் வேலை பார்த்து வரும் ரபீக் ( 25 வயது) என்பவரும் பார்த்தசாரதி கோவில் வாசல் முன்பு தூங்குவது வழக்கம் ஆகும். அதன் படி, நேற்று வியாழக்கிழமை இரவு இருவரும் பார்த்தசாரதி கோவில் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தேவனிடம், ரபீக் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், இருவர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது. கடுமையான ஆத்திரம் அடைந்த ரபீக் செங்கலால் தேவனை தலையில் பலமாக தாக்கினார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
மற்றொரு தொழிலாளி கல்லால் தாக்கியதில் உயிரிழப்பு
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த ரபீக் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. பின்னர், தாக்குதலில் காயம் அடைந்த தேவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: பக்தர்களே கவனம்.. திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்தான மீன்கள்.. கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை!




கொலை குற்றவாளி அதிரடி கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக தேவனின் குடும்பத்தினர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடைய ரபீக்கை தேடி வந்தனர். அவர், திருவல்லிக்கேணி பகுதியில் மறைந்திருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும் மது போதையில் மோதலில் ஈடுபட்டனரா.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!