கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!
Tiruvarur And Kallakurichi Student Dies: திருவாரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே காரக்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு, அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை ( ஜூன் 11) காலை ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். இதில், சில மாணவர்கள் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது படு பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். உடனே, அருகில் இருந்த மாணவர்கள் பயத்தில் சத்தம் போட்டனர்.
3 மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு
அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்பதற்காக விரைந்தனர். ஆனால், கார் மோதியதில் லோகேஷ் மற்றும் ரஷித் உள்பட 3 மாணவர்கள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடினர். அவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால், அந்த மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க: ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி.. இருவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்.. அதிரடி தீர்ப்பு!




கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 4 மாணவர்களின் சடலங்களை மீட்டு உடல் கூராய்வுக்காக திருவாரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளிக்குறிச்சியில் இரு மாணவர்கள் பலி
பள்ளி சென்று வீடு திரும்பிய 4 மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய 2 பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் என மொத்தம் 6 பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
மது போதையில் காரை இயக்கி விபத்து- ஓட்டுநர் கைது
இதனிடயை, மன்னார்குடி விபத்தில் கூத்தாநல்லூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக மன்னார்குடி – தஞ்சாவூர் சாலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுமா?