கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம்.. மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ!
அதன் தொடர்ச்சியாக, இன்று மீண்டும் தொடங்கியுள்ள விசாரணையில், சம்பவத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கிச் சிபிஐ தன் விசாரணையைத் திருப்பியுள்ளது. துயரச் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையத் அலி மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 10 காவலர்களுக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
கரூர், ஜுன் 11: கரூரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணையானது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பயங்கரமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கைக் கையில் எடுத்துப் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: “திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட்”.. வீரபாண்டியன் அறிவிப்பு
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விசாரணை:
சட்டமன்றப் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்ததால், கடந்த சில மாதங்களாக இந்தச் சிபிஐ விசாரணையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து, அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசாருக்குச் சம்மன்; நேரில் ஆஜர்:
முன்னதாக, கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் எனப் பலதரப்பட்ட நபர்களிடம் ஏற்கனவே பலகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக, இன்று மீண்டும் தொடங்கியுள்ள விசாரணையில், சம்பவத்தன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கிச் சிபிஐ தன் விசாரணையைத் திருப்பியுள்ளது. துயரச் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையத் அலி மற்றும் உதவி ஆய்வாளர்கள் (SI) உட்பட மொத்தம் 10 காவலர்களுக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
இதையும் படிக்க: “தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்; சிபிஐ-யின் முடிவை ஏற்கத்தான் வேண்டும்”.. ப.சிதம்பரம் அதிரடி!
5 காவலர்கள் விசாரணைக்கு ஆஜர்:
அந்த சம்மனின் அடிப்படையில், இன்று முதற்கட்டமாக ஐந்து காவலர்கள் கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளனர். அவர்கள் தங்களோடு சில முக்கிய ஆவணங்களையும் உள்ளே எடுத்துச் சென்றுள்ளதாகவும், அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.