அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!
AIADMK 4 Former MLAs : அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சட்டப் பேரவை செயலர் சாந்தி கடிதம் அனுப்பி உள்ளார் .
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் விவகாரம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தகுதி நீக்க மனுவை சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் வழங்கியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டப்பேரவை செயலாளர் சாந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கடந்த மே 13- ஆம் தேதி தகுதி நீக்க மனு தொடர்பாக அதிமுகவின் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் அளித்த பதில்கள் மீது கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால் 1986- ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் ( கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளில் விதி 7 (7)- இன் கீழ், பேரவை தலைவர் கடந்த ஜூலை 3- ஆம் தேதி இசக்கி சுப்பையா, 9- ஆம் தேதி மரகதம் குமரவேல் ஆகியோரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டிருந்தார்.
4 எம்எல்ஏக்கள் நேரில் விளக்கமளிக்க வேண்டும்
அப்போது, அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பார்வையில் காணும் இந்த கடிதங்கள் மற்றும் தங்களின் கடிதங்களைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அழைத்து சில விளக்கங்களை கேட்க விரும்புவதால், முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் வருகிற ஜூலை 30- ஆம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘ஜனநாயகன்’ தியேட்டரில் விஜய பிரபாகரன் தோல்வி வீடியோ.. மன்னிப்பு கேட்ட தவெக எம்எல்ஏ..




எடப்பாடி பழனிசாமியும் நேரில் வரவேண்டும்
அதே நேரம் அவர்கள் விளக்கம் அளிக்கையில், எடப்பாடி பழனிசாமியும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கு எதிராக, இவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரிடம் மனு அளித்திருந்தனர்.
தகுதி நீக்க நடவடிக்கை மனு நடவடிக்கை
அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மேற்கண்ட 4 முன்னால் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யைச் சந்திக்கச் சிவகுமார் திடீர் தயக்கம்?.. ஆகஸ்ட் சந்திப்பு ரத்தாகிறதா?..