‘ஜனநாயகன்’ தியேட்டரில் விஜய பிரபாகரன் தோல்வி வீடியோ.. மன்னிப்பு கேட்ட தவெக எம்எல்ஏ..
TVK MLA Selvam Clarification: ஜனநாயகன் தியேட்டர் வீடியோ தவெக எம்எல்ஏ செல்வம் விளக்கம் மன்னிப்பு கோரியதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார். தியேட்டரில் விஜய பிரபாகரன் தோல்வி வீடியோ ஒளிபரப்பப்பட்டது தனது கவனத்திற்கு வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி, ஜூலை 26: விருதுநகரில் ‘ஜனநாயகன்’ திரைப்படச் சிறப்புக்காட்சியின் போது தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தோல்வியடைந்த செய்திக் காணொளியைத் திரையரங்கில் ஒளிபரப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இச்சம்பவம் தனது கவனத்திற்கு வராமல் நடந்ததாக த.வெ.க விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இச்சம்பவத்திற்காகத் தேமுதிக நிர்வாகிகளிடம் தாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!
“என் கவனத்திற்கு வந்திருந்தால் தடுத்திருப்பேன்!”
இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த த.வெ.க விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வம் அளித்த விளக்கத்தில், “தமிழகம் முழுவதும் 1,500 திரையரங்குகளில் ஜனநாயகன் படம் வெளியாகியுள்ளது. விருதுநகரில் உள்ள தியேட்டரில் எனது கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் சிலர் எனது கவனத்திற்குக் கொண்டு வராமலேயே அந்த வீடியோவை ஒளிபரப்பச் செய்துள்ளனர்.ஙஇந்த விவகாரம் எனது கவனத்திற்கு முன்னதாகவே வந்திருந்தால், 100% அதனை நான் செய்ய அனுமதித்திருக்க மாட்டேன்.
தேமுதிகவிடம் மன்னிப்பு:
இது தொடர்பாகத் தேமுதிகவின் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். எனது நிர்வாகிகள் செய்த இந்தத் தவறான நடவடிக்கைகாக நான் தேமுதிக நிர்வாகிகளிடம் ‘சாரி’ கேட்டுக்கொண்டேன். தவறான செயலில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்திற்காக நேற்றைய தினமே வருத்தம் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
திரையரங்கில் நடந்தது என்ன?
முன்னதாக, முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானதையடுத்து, எம்.எல்.ஏ செல்வம் தனது ஆதரவாளர்களுடன் விருதுநகரில் உள்ள திரையரங்கில் சிறப்புக்காட்சியைக் காண வந்தார். அப்போது திரைப்பட இடைவேளையின் போது, எம்.எல்.ஏ செல்வம் தரப்பில் தயார் செய்யப்பட்ட பிரத்யேக வீடியோ திரையிடப்பட்டது. அதில், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தோல்வியடைந்த செய்தி தொலைக்காட்சிக் காட்சிகளை ரெக்கார்ட் செய்து ஒளிபரப்பியதுடன், எம்.எல்.ஏ செல்வத்தின் வெற்றி விழாக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
தேமுதிக முற்றுகை & 83 பேர் கைது:
இதையறிந்த தேமுதிகவினர் கடும் கொந்தளிப்படைந்து, எம்.எல்.ஏ செல்வத்தைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குறித்த திரையரங்கை முற்றுகையிட்டனர். இதனால் அங்குப் பதற்றம் நிலவிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 83 தேமுதிகவினரைப் போலிஸார் கைது செய்தனர்.
மேலும் படிக்க: தந்தை கண்முன்னே சோகம்.. திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து மோதி விபத்து.. கல்லூரி மாணவி பரிதாப பலி!
தவெக ஒன்றியச் செயலாளர் கைது:
திரையரங்கச் சர்ச்சை ஒருபுறம் இருக்க, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கல் குவாரிக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டி, கம்ப்யூட்டர், டிவி மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய புகாரில் த.வெ.க ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரைப் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.