தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!
TVK MLA Horse Trading Case: தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்ப்பதற்காக இளையராஜா எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பாக திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரிடம் 2-ஆவது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்ப்பதற்காக அந்த கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேகாலயா புராஜக்ட் என்ற பெயரில் மிகப்பெரிய சதி திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், ஐ. பி. டி. எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் திருநாவுக்கரசு உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இதில், விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
செந்தில்பாலாஜியிடம் 2 ஆவது நாளாக விசாரணை
அதன்படி, அவருக்கு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி இருந்தது. இந்த நிலையில், பிணைத்தொகை செலுத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி காலை மற்றும் மாலை வேளையில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை 2- ஆவது நாளாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, அவர்களிடம் குதிரை பேரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: “காவிரி உரிமை அரசியல் அல்ல; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை!”.. மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!




கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்
இதில், பல்வேறு தகவல்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி 10 நாட்கள் கையெழுத்திடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர்கள் கையெழுத்திடாமல் இருந்து வந்தனர். இதனால், போலீசார் இருவரையும் கைது செய்ய திட்டமிட்டு இருந்தனர். முதல் நாள் நடைபெற்ற விசாரணையில் கூடுதல் துணை ஆணையர் குமரகுருபரன் மற்றும் உதவி ஆணையனர் அழகு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை சுட்டிக்காட்டி சுமார் 50- க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியிருந்தனர்.
வெளிநாட்டில் இருந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
இந்த விவகாரத்தில் சிங்கப்பூரை சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்காக வெளிநாட்டில் இருந்து அரசியல் தலையீடு உள்ளவர்கள் மூலமாக தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: TN Budget 2026: பள்ளி கல்வித்துறை பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?.. முழு விவரம்!!