“காவிரி உரிமை அரசியல் அல்ல; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை!”.. மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!
Aadhav Arjuna Detailed Counter to MK Stalin: மேகதாட்டு அணை ஆதவ் அர்ஜுனா மு க ஸ்டாலின் இடையே எழுந்துள்ள அரசியல் விவாதத்தில், தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் சட்டமன்றத் தீர்மானங்கள் குறித்த விரிவான ஆதாரங்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை, ஜூலை 26: மேகதாட்டு அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறது என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடிஅளித்துள்ளார். அதன்படி, முதலமைச்சர் விஜய் கடந்த மே 27, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, மேகதாட்டு அணைத் திட்டத்திற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இதையும் படிக்க: மேகதாட்டு அணை பிரச்சனை.. தமிழகம் – கர்நாடகா பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!.. ஓசூரில் பயணிகள் தவிப்பு!!
பிரதமர் மோடியுடனான சந்திப்பு:
காவிரி நீர் உரிமையும்… தமிழகத்தின் வாழ்வுரிமையும்!
முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சினை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது… pic.twitter.com/hkM3LIGeY8
— Aadhav Arjuna (@AadhavArjuna) July 26, 2026
2007-ஆம் ஆண்டின் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்குரிய நீரைக் கர்நாடகா முழுமையாகத் திறந்துவிட வேண்டும். மேகதாட்டு அணைத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) மத்திய அரசு எந்தவொரு சூழலிலும் அனுமதி வழங்கக் கூடாது எனப் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது.
பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம்:
கர்நாடக அரசு மேகதாட்டுவில் பூமி பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஜூன் 19, 2026 அன்று முதலமைச்சர் பிரதமருக்கு மீண்டும் ஒரு விரிவான கடிதம் எழுதினார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா ஒருதலைப்பட்சமாக அணை கட்ட முடியாது.
1956-ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறு சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மேகதாட்டு எதிர்ப்புத் தீர்மானத்தின் நகலும் பிரதமருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உறுதியான நிலைப்பாடு:
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் கூட்டங்களில், தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, கர்நாடகா உரிய காலத்தில் நீரத் திறந்துவிட வேண்டும் என்பதையும், மேகதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு தனது உரிமைகளை விட்டுக் கொடுக்காது என்பதையும் தொடர்ந்து வலுவாகப் பதிவு செய்து வருகின்றனர்.
திமுக மீது பாய்ந்த விமர்சனங்கள்:
“காவிரி விவகாரத்தில் குறுகிய அரசியல் ஆதாயம் தேட நினைப்பது தவறானது” என்று குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்ட தவறான முடிவுகளும் சட்டக் குளறுபடிகளுமே காவிரிப் பிரச்சனையில் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தியதாகச் சாடினார்.
இதையும் படிக்க: கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!
“காவிரி நீர் உரிமை என்பது சாதாரண அரசியல் பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதாரப் பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமை. அதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது” என்று அவர் கூறியுள்ளார்.