“தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்; சிபிஐ-யின் முடிவை ஏற்கத்தான் வேண்டும்”.. ப.சிதம்பரம் அதிரடி!
நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை நேரில் சந்தித்தேன். அப்போது அவர்களுடைய கட்சியின் பொதுக்குழு கூடி இது குறித்து விவாதிக்க உள்ளதாகக் கூறினார். தற்போது அவர்கள் பொதுக்குழுவில் விவாதித்து ஒரு முடிவை எடுத்திருந்தால், அந்த முடிவை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்று தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
காரைக்குடி, ஜுன் 11: தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என காங்கிரஸ் மூத்த மூத்த தலைவர் ப.சிதம்பரம் உறுதி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் மாற்றங்கள், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஆண்டுகள் குறித்த பல்வேறு முக்கிய கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்க: “திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட்”.. வீரபாண்டியன் அறிவிப்பு
தவெக ஆட்சி நீடிக்கும்:
இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய ப.சிதம்பரம், “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும்” என்று தனது கணிப்பைத் தெரிவித்தார். மேலும், “தொழில் செய்வதற்கான திட்டங்களை அரசு முறையாக வரையறுத்து, அதனைத் திறம்பட நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய முக்கியமான கோரிக்கை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ விலகல்:
திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், “நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை நேரில் சந்தித்தேன். அப்போது அவர்களுடைய கட்சியின் பொதுக்குழு கூடி இது குறித்து விவாதிக்க உள்ளதாகக் கூறினார். தற்போது அவர்கள் பொதுக்குழுவில் விவாதித்து ஒரு முடிவை எடுத்திருந்தால், அந்த முடிவை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்று தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
பிரதமர் மோடியின் 4,399 நாட்கள் சாதனை:
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பிரதமராகப் பதவி வகித்தது குறித்துத் தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்தார். “ஏறத்தாழ 12 ஆண்டுகள், அதாவது 4,399 நாட்கள் தொடர்ந்து மோடி பாரத பிரதமராக நீடிப்பது ஒரு மிகப்பெரிய சாதனைதான் என்பதில் எந்தவித மறுப்பும் இல்லை; அதற்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இது தொடர்பாக இன்று காலையில்கூட நான் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தேன்” என்றார். இருப்பினும், பிரதமர் மோடியின் இந்த சாதனை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை மிஞ்சிவிட்டதாக பாஜ கட்சியினரும் ஊடகங்களும் பரப்பி வரும் செய்திகளுக்கு அவர் விளக்கத்தை அளித்தார்.
வரலாற்று ரீதியாகச் சரியல்ல:
ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி மிஞ்சிவிட்டதாகக் கூறுவது வரலாற்று ரீதியாகச் சரியல்ல. ஊடகங்கள் ஏன் எந்தவிதமான பின்விளக்கமும் அல்லது குறிப்பும் இல்லாமல் இத்தகைய செய்திகளைப் பிரசுரிக்கின்றன என்று எனக்குப் புரியவில்லை. ஜவஹர்லால் நேரு அவர்கள் முதன்முதலில் 1947 முதல் 1952 ஆம் ஆண்டு வரை (நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு) ஐந்து ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்தார். அதற்குப் பிறகு, முறைப்படியான தேர்தல்கள் மூலம் 1952 முதல் 1964 வரை 4,398 நாட்கள் பிரதமராக நீடித்தார்.
இதையும் படிக்க: “சிங்கப்பெண் படைக்கு துப்பாக்கி”.. நாள்தோறும் 2 ஷிப்ட் முறையில் ரோந்துப் பணி!!
நேருவின் பிந்தைய 4,398 நாட்கள் ஆட்சிக்காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு மோடி அவரை மிஞ்சிவிட்டார் என்று கூறுவது தவறு. நேரு முதலில் ஆட்சி செய்த அந்த ஐந்து ஆண்டுகளையும் (ஏறத்தாழ 1,800 நாட்கள்) சேர்த்தே கணக்கிட வேண்டும். எனவே ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் போது இந்த வரலாற்றுப் பின்னணியைக் குறிப்புகளாகப் போட வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.