நாமக்கல்லில் பரபரப்பு.. ஆசை வார்த்தை கூறி பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை.. திருவண்ணாமலை இளைஞர் கைது!
Namakkal Student Harassing : நாமக்கல் மாவட்டத்தில் அணையை சுற்றி காண்பிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர் செக்கடியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கருப்பன் ( 28 வயது). கூலி தொழில் பார்த்து வரும் இவர், இன்ஸ்டாகிராம் வாயிலாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு தொலைபேசியிலும் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் கடந்த ஜூன் 8- ஆம் தேதி அந்த சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது பள்ளிக்கு வந்த கருப்பன் தங்களது ஊரில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றிக் காட்டுவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அணையை காட்டுவதாக கூறி சென்று பாலியல் வன்கொடுமை
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றிக் காட்டுவதாக கூறி அழைத்து சென்ற அந்த சிறுமியை ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால், அந்த சிறுமி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து, அந்த சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று அவரது பள்ளியின் அருகே விட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
மேலும் படிக்க: குண்டும் குழியுமான சாலை… பிஞ்சு உயிரை காவு கொண்ட பரிதாபம்!




ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு
அங்கிருந்து, சிறுமி வீட்டுக்கு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வீடு சென்ற சிறுமியிடம் அவரது பெற்றோர் எதற்காக தாமதமாக வந்தாய் என கேட்டுள்ளனர். அதற்கு, தனக்கு நடந்த கொடூர சம்பவத்தை அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமி பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளைஞர் கைது
இதில், கருப்பன் தொடர்பாக அனைத்து விவரங்களையும் போலீசார் திரட்டினர். இதைத் தொடர்ந்து, கருப்பன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். முன்னதாக, கருப்பனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஜனநாயகன் படம் கசிவு விவகாரம்.. அதிரடி வேட்டையில் சைபர் கிரைம்.. முக்கிய நபர் கைது!