ஏஐ மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை பிடித்த சென்னை போலீஸ் – பரபரப்பு சம்பவம்
AI Helps Chennai Police : சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 20 : சென்னையில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரில் கடந்த 2007 ஆம் ஆண்டு பாண்டியமணி என்பவரை கொலை செய்த வழக்கில் ஷேக் அப்துல்லா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஷேக் அப்துல்லா என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு வயது 20.
ஏஐ மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை பிடித்த சென்னை போலீஸ்
இதனையடுத்து அவரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் அவர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அந்த லிஸ்டில் ஷேக் அப்துல்லாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : தருமபுரி அருகே பயங்கரம்.. மண்சரிவில் உருண்ட பாறை ரயில் மீது மோதி விபத்து.. ஓட்டுநரின் திறமையால் தப்பிய பயணிகள்!!




ஏஐ உதவியுடன் குற்றவாளியை கைது செய்தது எப்படி?
தற்போது ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அதனை பயன்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை கைது செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஏஐயிடம் கொடுத்து அதனை அவர் இப்போது எப்படி இருக்கிறார் கேட்டுள்ளனர். மேலும் அவர் பல்வேறு தோற்றங்களில் இருப்பது போல மாற்றிக்கொடுக்குமாறு பிராம்ப்ட் கொடுத்துள்ளனர்.
ஏஐ உருவாக்கிய புகைப்படங்களை வைத்து வடக்கு மண்டல தீவிர குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ஷேக் அப்துல்லாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதன் மூலம் ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலை பகுதியில் வசித்து வருவது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு முகாமிட்டு கண்காணித்த காவல் துறையினர், தற்போது 39 வயதாகும் ஷேக் அப்துல்லாவை கைது செய்தனர்.
இதனையடுத்து ஷேக் அப்துல்லாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. பல்வேறு இடங்களில் மாறி வந்த அவர் இறுதியாக திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வந்திருக்கிறார்.
இதையும் படிக்க : “கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசுவது வருத்தமளிக்கிறது!”.. சாட்டையை சுழற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல்லா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்குப் பின்னர், ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை ஏஐ உதவியுடன் கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஒரு பக்கம் ஏஐ மனிதர்களுக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் இதுபோன்ற மனிதர்களுக்கு பயனுள்ள விஷயங்களுக்கு உதவியாகவும் இருந்து வருகிறது.