சிறிய விபத்து… பெரிய வாக்குவாதம்.. சென்னையில் ஆட்டோ – பைக் மோதியதில் அரங்கேறிய பயங்கர கத்திக்குத்து!
Kodungaiyur Crime : சென்னையில் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் கொடுரமான முறையில் கழுத்தில் குத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சென்னை மாவட்டம், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் வாகிதா ( 28 வயது). இவர், தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொடுங்கையூர் பிரதான சாலையில் சென்ற போது அந்த பகுதியில் எதிரே வந்த ஆட்டோ மீது வாகிதாவின் இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், வாகிதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் கீழே விழுந்த வாகிதாவை மீட்டனர். தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுனரிடம் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அந்த ஆட்டோவின் ஓட்டுநர் தான் மீது உள்ள தவறை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக அந்த பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருவரை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநர்
இதில், ஆத்திரம் அடைந்த வாகிதா தனது தந்தை ரஹீமுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தை கூறி சம்பவ இடத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த ரஹீம் ஆட்டோ ஓட்டுனரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஆட்டோ ஓட்டுனருக்கும், ரஹீமுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது, ஆட்டோ ஓட்டுனர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹீமின் கழுத்து பகுதியில் குத்தினார்.
மேலும் படிக்க: தருமபுரியில் கைக்குழந்தையுடன் மழைநீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த தாய்!.. விபத்தா? தற்கொலையா? போலீசார் விசாரணை!




கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார்
இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த ரஹீம் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் திரண்டு வருவதை பார்த்த ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடனடியாக ரஹீமை அங்கிருந்தவர்கள் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, ரஹீமின் மகள் வாகிதா கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தலைமறைவான ஆட்டோ ஓட்டுநருக்கு வலை வீச்சு
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறிய அளவிலான விபத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கனவாகி போன கல்லூரி படிப்பு.. உயிரை மாய்த்து கொண்ட பிளஸ் 2 மாணவி.. தீரா துயரில் பெற்றோர்!