அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
Aadhav Arjuna criticized M.K. Stalin in Legislative Assembly: தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவையில் அப்பாவை காணோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இது கூச்சல் குழப்பத்தை எழுப்பியது.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக்கில் மதுவுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பது குறித்து விளக்கம் அளித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்தால் வீடு தேடி மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்ற தகவல் தவறானதாகும். டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்துக்கு பணம் செல்லும் வகையில் தான் ஆன்லைன் முன்பதிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், மது புக்கிங் செய்வது மட்டுமே நடக்கும். அவ்வாறு மதுவை புக்கிங் செய்தாலும் டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று தான் மதுபானங்களை வாங்க முடியும்.
திமுகவினர் ரூ.900 கோடி வாங்கியுள்ளனர்
மது விற்பனையால் வருமானத்தை உயர்த்துவோம் என்று தமிழக அரசு கூறாது என்று தெரிவித்தார். அப்போது, அமைச்சர் அருண்ராஜ் எழுந்து, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை அளித்துள்ளது என்று குறிப்பிட்டார். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்து திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா. இல்லையா என்று கேள்வி எழுப்பியதுடன், லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி தி.மு.கவினர் வாங்கியது குறித்து உதயநிதி பதிலளிப்பாரா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: “நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்குத் துரோகம்!”.. தவெக அரசின் தனித் தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு.. பேரவையில் இபிஎஸ் உரை!!




அவையில் அப்பாவை காணோம் . . .
அப்போது, அமைச்சரின் பேச்சுக்கு குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகம் நிதி வாங்கியது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும், லாட்டரி நிறுவனத்தில் விற்பனை செய்தது யார் என ஆதவ் அர்ஜூனாவின் மாமனருக்கு தான் தெரியும். அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என்று பதில் அளித்தார். இதற்கு ஆதவ் அர்ஜூனா எழுந்து ரூ. 900 கோடி வாங்கியது உதயநிதி அப்பா மு.க. ஸ்டாலினுக்கு நன்றாக தெரியும். அவர் தற்போது அவையில் இல்லை. அவரிடம் கேட்க சொல்லுங்கள் என தெரிவித்தார்.
அப்பா- மாமனார் வார்த்தைகள் அவை குறிப்பிலிருந்து நீக்குக
இந்த விவாதத்தால் அவையில் சிறிது கூச்சல் மற்றும் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக கொறடா எ.வ.வேலு எழுந்து, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்று அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்று திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு என்று கூறினார். அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் நேரு கோரிக்கை வைத்தார்.
மேலும் படிக்க: “வாக்குறுதிகளை நிறைவேற்று!”.. தலைமைச் செயலகம் முன் கோணிப்பையைக் கட்டி விவசாயிகள் போராட்டம்.. குண்டுக்கட்டாகக் கைது!