பழனி நில முறைகேடு வழக்கு.. இடைக்கால ஜாமீன் திடீர் ரத்து.. சார்- பதிவாளர் அதிரடி கைது..!
Palani Sub Registrar Arrested : பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி நிலம் முறைகேடு வழக்கில் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.45 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் நிலத்தை விற்ற முருகதாஸ், நிலத்தைப் பெற்ற வெள்ளதுரை, சேதுபதி உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பத்திரப்பதிவு செய்த பழனி தற்காலிக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிரந்தர சார்பாக பாலசந்தர், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி எஸ். பி. சஜிதா தலைமையிலான போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாமீன் ரத்து- சார் பதிவாளர் அதிரடி கைது
இதனிடையே, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இடைக்கால முன் ஜாமீன் பெற்ற நிலையில், அவரது ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் திடீரென ரத்து செய்தது. இதன் காரணமாக, சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்தனர். ஜஸ்டின் மணிகண்டனின் ஜாமின் மனு மீதான இறுதி தீர்ப்பு உயர்நீதிமன்றம் வழங்கி இருந்தத. இதில், பழனி சார்பதிவாளர் பாலசுந்தரால் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளுக்கு எந்த விதம் மதிப்பும் அளிக்காமல் கொடைக்கானலில் இருந்து பொறுப்பு சார்பதிவாளராக வந்திருந்தால் ஜஸ்டின் மணிகண்டன் நேரடியாக செயல்பட்டு பதிவு நடவடிக்கையை முடித்திருக்கிறார்.
மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!




காவலில் வைத்து விசாரிக்க அவசியம்
இது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு உதவும் வகையில் வேண்டுமென்றே அந்த ஆவணத்தை பதிவு செய்ததை காட்டுகிறது. எனவே, அவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே, முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அத்துடன், ஜஸ்டின் மணிகண்டனுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆன நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை போலீசார் இன்று கைது செய்தனர்.
சார் பதிவாளரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
கோயில் நில மோசடி வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜஸ்டின் மணிகண்டன் 5- ஆவது நபராக கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற காவலில் உள்ள அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் காலங்களில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு காவல் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வேலூரில் பகீர் சம்பவம்.. சிறுமியை கடத்தி குடித்தனம் நடத்திய 2 பெண்டாட்டிகாரர்.. போக்சோவில் கொக்கி போட்ட போலீஸ்!