தமிழக வெற்றிக் கழகம் தெரியும்.. அதென்ன தக்காளி வெற்றிக் கழகம்? பரபரப்பை ஏற்படுத்திய அரசு பேருந்து!
Thakkali Vettri Kazhagam : சென்னை மாவட்டத்தில் அடையாறில் சென்ற அரசு பேருந்தில் மின்னனு பெயர் பலகையில் தக்காளி வெற்றிக் கழகம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் பொதுமக்களின் தேவைக்காக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் அண்மைக்காலமாக மின்னனு பெயர் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சென்னை அடையாறு பணிமனையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தின் மின்னணு பெயர் பலகையில் “தக்காளி வெற்றிக் கழகம்” என்ற வாசகம் இடம் பெற்று இருப்பது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. அடையாறு பணிமனையில் இருந்து புறப்பட்டு சென்ற அரசு பேருந்தின் பின்பகுதியில் உள்ள மின்னணு பெயர் பலகையில் “தக்காளி வெற்றிக் கழகம்” என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. இதனை, பார்த்த வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சிலர், இதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கம்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் வைரலாக பரவி வருகிறது. இதில், அரசு பேருந்தின் மின்னணு பெயர் பலகையில் எவ்வாறு இத்தகைய பிழை ஏற்பட்டது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் உள்ள டிஜிட்டல் பெயர் பலகை மர்ம நபர்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுகவில் மற்றொரு கைது? முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்.. செப். 2 வரை நீதிமன்றம் கெடு!
மர்மநபர்கள் கைவரிசை காரணம்
அந்த பேருந்தின் புகைப்படம் இணைக்கப்பட்டு தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பேருந்தின் வழித்தட விவரப் பலகை சில நாட்களுக்கு முன்பு தக்காளி வெற்றி கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பேருந்தின் மின்னணு வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது. மேலும், இது போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெறாத வகையில் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
🚨 “Thakkali Vetri Kazhagam” – Government Bus Display Board 🚨@MtcChennai pic.twitter.com/eXB2UuXeQp
— Hari (@hari_noty) August 6, 2026
போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் யார், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!