AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்சி அறிவிக்கும் முன்பே வேட்புமனுத் தாக்கல்.. பாஜக நிர்வாகியை அதிரடியாக நீக்கிய நயினார் நாகேந்திரன்..

Tamilnadu Assembly Election: இந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத சூழலில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த R. முரளீதரன், தன்னிச்சையாகத் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சி அறிவிக்கும் முன்பே வேட்புமனுத் தாக்கல்.. பாஜக நிர்வாகியை அதிரடியாக நீக்கிய நயினார் நாகேந்திரன்..
நயினார் நாகேந்திரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Apr 2026 12:55 PM IST

Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக நிர்வாகி ஒருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்.23ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 6ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைகிறது. இதையொட்டி, வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகள், வாக்கு சேகரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதையும் படிக்க: சிறையிலிருந்தே தேர்தல் களம் காணும் ஹரி நாடார்.. ஆலங்குளத்தில் மீண்டும் சவால்!!

இன்று மாலை வேட்பாளர்கள் பட்டியல்:

இதனிடையே, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 இடங்களைப் பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் வேட்புமனுத் தாக்கலை நிறைவு செய்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டும் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காமல் உள்ளது. அந்தவகையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல்:

இந்த நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத சூழலில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த R. முரளீதரன், தன்னிச்சையாகத் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், வேட்பாளர்களை இறுதி செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், முரளீதரன் செய்த செயல் கட்சித் தலைமைக்கு கடும் அழுத்தம் தந்தது.

கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்:

இதையடுத்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த R. முரளீதரன் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் R.முரளீதரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டுள்ளார்.

கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததால், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: நேரடி அரசியல் களத்தில் சபரீசன்.. டெல்லியே அடுத்த டார்கெட்?.. திமுகவின் புதிய வியூகம்..

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பாஜக தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கை அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow Us