பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. முகவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் முக்கிய உத்தரவு!
Tamil Nadu BJP Agents Meeting : தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அமைச்சரும், தேர்தல் மேற்பார்வையாளருமான பியூஷ் கோயல் தலைமை வகித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ( அன்புமணி தரப்பு), அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. இதே போல, திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் என 4 முனை போட்டி நிலவியது. இதில், ஒவ்வொரு கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் திங்கள்கிழமை மே 4- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு கட்சிகளை சேர்ந்த முகவர்கள் இருப்பர்.
வாக்கு எண்ணும் பணிக்கு பிந்தைய அரசியல் நடவடிக்கை
அவர்கள் தங்களது கட்சிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணும் போது விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஒவ்வொரு கட்சிகளின் தலைமையும் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன. மேலும், வாக்கு எண்ணும் பணிக்கு பிந்தைய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் கட்சியினர் இடையே ஆலோசனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சி சார்பில் வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணிக்கும் முகவர்களுக்கான பயிற்சி முகாம் கூட்டம் இன்று மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் நாகரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை ( மே 2- ஆம் தேதி) நடைபெற்றது.
மேலும் படிக்க: வைரலாகும் “தவெக அமைச்சரவை பட்டியல்”.. செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!!




வேட்பாளர்களின் முகர்வர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள்
இந்த கூட்டத்துக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தலைமை வகித்தார். இதில், கட்சியின் வேட்பாளர்களின் முகவர்களுக்க பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இதில், வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள முகவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், அதிக கவனத்துடனும் செயல்பட வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடிப்பதுடன், எந்தவித தவறும் நேராத வகையில் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெளிவாக அறிவுறுத்தினார்.
அரசியல் கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வுகள்
இந்த நிகழ்வில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதில், வெற்றியை எதிர் நோக்கியுள்ள கட்சிகள் தங்களது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக முகவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க: “தவெக ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை”.. மே 4-ல் உண்மை தெரியும்.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!