“தவெக ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை”.. மே 4-ல் உண்மை தெரியும்.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!
கடந்த ஐந்து கால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த மக்களின் உண்மையான எண்ணங்கள் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், "நாங்கள் வெற்றி பெறப் போகிறோம், அதனால் தான் அமைதியாக இருக்கிறோம்" என்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் நடிகர் விஜய் குறித்து பாஜக மூத்த தலைவரும், தமிழக பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறத் துடிக்கும் விஜய்.. புதிய வியூகம் வகுத்த தவெக..
கூட்டணி குறித்த கேள்வி:
ஒருவேளை அதிக தொகுதிகளில் விஜய் வெற்றி பெற்று, தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல் உருவானால் பாஜக (தேசிய ஜனநாயக கூட்டணி) விஜய்யின் ஆதரவை நாடுமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக அவர் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே கிடையாது” என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
கருத்துக்கணிப்புகள் மீது நம்பிக்கையில்லை:
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் விஜய்க்குச் சாதகமாகச் சில இடங்களில் வந்திருந்தாலும், அது உண்மையான தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்காது என்று அவர் குறிப்பிட்டார். அதோடு, தமக்கு கருத்துக் கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்றும், அவை வெறும் ‘கருத்துத் திணிப்பாகவே’ உள்ளன என்றும் விமர்சித்தார். பாஜக கூட்டணி வலுவான நிலையில் இருப்பதாகவும், மக்கள் தங்கள் கூட்டணிக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மே 4-ல் வெளியாகும் தீர்ப்பு:
கடந்த ஐந்து கால திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த மக்களின் உண்மையான எண்ணங்கள் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படும் என அவர் தெரிவித்தார். மேலும், “நாங்கள் வெற்றி பெறப் போகிறோம், அதனால் தான் அமைதியாக இருக்கிறோம்” என்றும், எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலைப் பிரச்சனைகளில் பாஜக அரசு எப்போதும் மக்கள் நலன் கருதியே முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: வைரலாகும் “தவெக அமைச்சரவை பட்டியல்”.. செங்கோட்டையன் கொடுத்த ரியாக்ஷன்!!
மும்முனைப் போட்டி:
அரசியல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவுவதாகக் கூறப்படும் சூழலில், ஆக்ஸிஸ் மை இந்தியா போன்ற நிறுவனங்கள் தவெக 120 இடங்கள் வரை வெல்லலாம் எனக் கணித்துள்ளன. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி போன்றவர்கள் தவெக 121 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.