சசிகலாவின் மெகா வாக்குறுதிகள்.. இலவச லேப்டாப் முதல் மகப்பேறு நிதியுதவி வரை!
Sasikala Release AIPTMMK Election Promises: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை அதன் தலைவர் சசிகலா வெளியிட்டுள்ளார். இதில், இலவச லேப்டாப், கல்வி உதவித் தொகை முதல் மகப்பேறு உதவித் தொகை வரை பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம், மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. அதன்படி, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டுள்ளனர். இதே போல, தமிழக சட்டமன்ற தேர்தலிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அஇபுதமமுக கட்சியின் தேர்தல் அறிக்கையை சசிகலா வெளியிட்டார். இதில்,
மேலும் படிக்க: ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
- மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,250- ஆக உயர்த்தப்படும்.
- கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,250- ஆக உயர்த்தப்படும்.
- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
- மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
- இலவச மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும்.
- பட்டியல் இன, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கக்கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு 5 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
- முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 60 தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸுடன் சசிகலா கூட்டணி
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா அரசியலில் பெரிதளவு ஈடுபடாமல் இருந்து வந்தார். தற்போது, தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சசிகலா தொடங்கியதுடன், கட்சி கொடியையும் அறிமுக செய்தார். இதைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை இரு முறை அவரது வீட்டில் சந்தித்து கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.




சசிகலா- ராமதாஸ் தனித்தனியே பிரசாரம்
அதன்படி, சசிகலா- ராமதாஸ் கூட்டணி அமைந்தது. பின்னர், ராமதாஸ் தனது கட்சியின் சார்பில் 30 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதே போல, சசிகலாவும் தனது கட்சி சார்பில் 21 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதாக சசிகலா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜெயலலிதாவுக்கு பிறகு நான் முதல்வராகி இருக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்!