பெரம்பூர் களத்தில் விஜய்.. இன்று வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க திட்டம்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!!
Tamilnadu Assembly Election: இன்று காலை முதல் பெரம்பூர் தொகுதியின் முக்கிய வீதிகளில் விஜய் நடைப்பயணமாகச் சென்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதியவர்கள் மற்றும் பெண்களிடம் ஆசி பெற்று, அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கேட்டறிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் பெரம்பூர் தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்து, கட்சியின் ‘விசில்’ சின்னத்தைக் கோலமாக வரைந்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய விஜய், இன்று இரண்டாம் கட்டமாக நேரடியாக மக்களைச் சந்தித்து, வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று மாலை (ஏப்.17) பெரம்பூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஜவஹர் தெருவில் உள்ள தவெக தேர்தல் அலுவலகத்திற்கு விஜய் வருகை தந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாடிய அவர், கட்சியின் சின்னமான ‘விசில்’ சின்னத்தை தரையில் கோலமாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..
நேரடி மக்கள் சந்திப்பு:
இதனைத் தொடர்ந்து, இன்று தொகுதி முழுவதும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இன்று காலை முதல் பெரம்பூர் தொகுதியின் முக்கிய வீதிகளில் விஜய் நடைப்பயணமாகச் சென்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதியவர்கள் மற்றும் பெண்களிடம் ஆசி பெற்று, அவர்களின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கேட்டறிய உள்ளதாகவும், குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் பெரம்பூர் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் மக்கள் அவரிடம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வழியெங்கும் உற்சாக வரவேற்பு:
விஜய்யின் வருகையை முன்னிட்டு பெரம்பூர் தொகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெண்கள் அவருக்கு ஆர்த்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அவரிடம் கை குலுக்கவும், புகைப்படம் எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரம்பூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யவும் பாடுபடுவேன் என்று விஜய் தனது பரப்புரையின் போது உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விஜய் வீடு வீடாகப் பரப்புரை செல்ல திட்டமிட்டுள்ளதால், பெரம்பூர் பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. இதனால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இருப்பினும், தனது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் எளிய முறையில் அவர் தனது பயணத்தைத் தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தேர்தல் பணிமனைக்கு முன் விசில் சின்னத்தில் கோலமிட்ட விஜய்.. வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு..
தற்போது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், பெரம்பூரில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.