பிரதமர் மோடி வருகை.. தமிழகத்தில் களமிறங்கிய சிறப்பு பாதுகாப்பு படை.. பயண திட்டம் வெளியீடு!
Prime Minister Narendra Modi: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் எஸ்பிஜி வசம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றியிருந்தார். இதே போல, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றியிருந்தார். இந்த நிலையில், வருகிற மார்ச் 1- ஆம் தேதி (திங்கள்கிழமை) புதுச்சேரி மற்றும் மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பான பயணத் திட்ட விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
மேலும் படிக்க: அழிவுப்பாதையில் அதிமுக.. “திமுகவில் பெரு மகிழ்ச்சியோட தொண்டனாக இணைந்துள்ளேன்”.. ஓபிஎஸ் பேட்டி
- டெல்லியில் இருந்து பிரதமர் மோடி சிறப்பு விமான மூலம் நாளை சனிக்கிழமை ( பிப்ரவரி 28) சென்னை வந்தடைகிறார். அங்கு, ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
- மறுநாள் (மார்ச் 1) காலை புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
- அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு வருகை தருகிறார். அங்கு, சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் சிறப்பு விமான மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார்.
- மதுரைக்கு 2:45 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரவேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய வான் கட்டுப்பாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார்.
- தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை காணொலி வாயிலாகவும், பரமக்குடி- ராமநாதபுரம் 4 வழிச்சாலை உள்ளிட்ட மத்திய அரசு திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
- பின்னர், கார் மூலம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை 4 மணிக்கு வந்தடைகிறார். அங்கு, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.
- பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்த பின்னர் 4:30 மணிக்கு மண்டேலா நகரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்
இந்த பொதுக் கூட்டத்துக்காக 120 ஏக்கர் பரப்பளவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அமரும் வகையில், குளிர்சாதன வசதியுடன் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக கழிவறை, குடிநீர் மற்றும் 80 ஏக்கரில் வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் வருகையையொட்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.




மேலும் படிக்க: திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. மானங்கெட்டு திரிய வாழ்த்துகள் – காட்டமான பதிவை வெளியிட்ட அதிமுக ஐடி விங்..