அமலாக்கத்துறையிடம் சிக்கும் முக்கிய புள்ளிகள்? தலைமை இயக்குநர் ராகுல் நவீன் அதிரடி ஆலோசனை!
ED Director General Rahul Naveen: தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக அமலாக்கத் துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நிலுவையில் இருந்து வரும் வழக்குகள் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்வதற்காக அமலாக்க துறையின் தலைமை இயக்குனர் ராகுல் நவீன் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, அமலாக்க துறையின் தலைமை இயக்குனர் ராகுல் நவீன் நேற்று வியாழக்கிழமை ( பிப்ரவரி 26 ) சென்னைக்கு வருகை தந்தார். அவர், இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை மண்டலம் 1 அலுவலகத்தில் சென்னை மண்டலம் 1 மற்றும் மண்டலம் 2 ஆகிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளது. என்னென்ன வழக்குகளுக்கு சோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன் அது தொடர்பான விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதில், நிலுவையில் உள்ள வழக்குகளில் முக்கியமான வழக்குகள் என்னென்ன என்பது தொடர்பாகவும் அமலாக்கத்துறை தலைமை இயக்குனர் ராகுல் நவீன் பட்டியல் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு முடிவு
முக்கிய வழக்குகளில் உள்ள முக்கியத்துவம், அதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எப்படி கைப்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனர்கள் தலைமை இயக்குனர் ராகுல் நவீனுக்கு விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் முக்கிய வழக்குகளில் முடிவுகள் எடுக்கப்படுவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டலம் 1 மற்றும் 2 ஆகிய அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தலைமை இயக்குனர் ராகுல் நவீன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.
மேலும் படிக்க: அடுத்தது தஞ்சை தான்.. விஜய் மக்கள் சந்திப்பா? நிர்வாகிகள் சந்திப்பா? வெளியான தகவல்..




துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் காவல்
இந்த ஆலோசனையை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பாக 15- க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். முதலில் 5 பாதுகாப்பு படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 15- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி நிர்வாக துறையில் ரூ.1020 கோடி ஊழல் நிகழ்ந்துள்ளதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை இணைத்து வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்த நிலையில்…
இந்த விவகாரம் தற்போது உயர்நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், நகராட்சி துறை அமைச்சர் கே. என். நேரு மீது வழக்குப்பதிவு செய்வதற்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் அமலாக்கத்துறை தலைமை இயக்குனர் சென்னை வந்திருப்பதும், வழக்குகள் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்டு வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், சில முக்கிய புள்ளிகள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: திமுக vs அதிமுக.. அதிமுக ஆட்சியுடன் விலைவாசி உயர்வை ஓப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்..