Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூடு பிடிக்கும் தேர்தல் களம்…வாடகை வாகனங்களுக்கு திடீர் மவுசு…பிரசாரத்துக்கு முன்பதிவு செய்யும் கட்சிகள்!

Election Campaign Vechicle: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில். அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்காக வாடகை வாகங்களை முன்பதிவு செய்து வருகின்றன. இதனால், வாடகை வாகனங்களின் வாடகை மற்றும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதுடன், அதன் மவுசும் அதிகரித்துள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்…வாடகை வாகனங்களுக்கு திடீர் மவுசு…பிரசாரத்துக்கு முன்பதிவு செய்யும் கட்சிகள்!
பிரசாரத்துக்காக வாடகை வாகனங்கள் முன்பதிவு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Feb 2026 06:32 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சார பயணம், தெருமுனை பிரச்சாரம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் தயார் செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தலைவர்கள் அமரும் இடம், வாகனத்தின் மேல் பகுதியில் இருந்து பிரச்சாரம் செய்யும் ஹைடிராலிக் வசதி, அரசியல் கட்சி தலைவருடன் பயணிக்கும் நபர்கள் 5 பேர் வரை அமரும் வசதி, கழிவறை வசதி, உடை மாற்றும் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் வாகனங்கள் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தேர்தல் பிரசாரத்துக்காக வாடகை வாகனங்கள்

இதே போல, அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கிராமங்கள், வார்டுகள் தோறும் பிரச்சாரம் செய்வதற்காக வாடகை வாகனங்களை முன்பதிவு செய்து அதில், கட்சி கொடி மற்றும் கட்சி தலைவர்களின் படங்கள் ஆகியவற்றை அமைத்து பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கமாகும். அந்த வகையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வாடகைக்கு சரக்கு வாகனங்களை முன்பதிவு செய்து அதில் ஒவ்வொரு பகுதிகள் வாரியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதனால், வாடகை வாகனங்கள் வைத்திருக்கும் அதன் உரிமையாளர்களின் தொழிலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: ஈஷா யோகா மையத்தில் தொடங்கிய மகா சிவராத்திரி விழா – பிரபலங்கள் பங்கேற்பு

வாடகை வாகங்களின் மவுசு அதிகரிப்பு

தற்போது வரை மணல், செங்கல், மூட்டைகள் உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த சரக்கு வாகனங்கள் தற்போது கட்சி சார்பில் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டு கொண்டு வாகனங்களை முன் பதிவு செய்து வருவதால் சரக்கு வாகனங்களின் தட்டுப்பாடும், வாடகையும் அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மினி லாரி மற்றும் மினி ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து ஒவ்வொரு வார்டு மற்றும் பகுதி வாரியாக தெருமுனை பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கிவிட்டனர்.

தெருமுனை பிரசாரத்தை தொடங்கிய கட்சிகள்

இதில், அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மைக் மூலம் வாகனங்களின் பின்பகுதியில் நின்றவாறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மக்களிடம் கருத்து கேட்கும் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு பகுதியாக வாகனங்களில் சென்று பொதுமக்களிடம் துண்டு சீட்டை கொடுத்து அதில் தங்களது கருத்துக்களை நிரப்பி அதனை பெற்று வருகின்றனர். திமுக சார்பில் ஆட்டோ ஸ்டாண்டுகள் திறப்பு, தேர்தல் அலுவலகம் திறப்பு, பொதுக்கூட்டம் என்று தேர்தல் களத்தில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் தேர்தல் களம் முன்கூட்டியே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை இருக்குமா? தொடரும் பனிமூட்டம்..