அமித்ஷா கூட்டத்தில் அத்துமீறி பறந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு அதிகாரிகள்.. காரைக்காலில் பரபரப்பு!!
Drone flies over Amit Shahs rally: மத்திய அமைச்சர் அமித்ஷா சரியாக பகல் 12.30 மணியளவில் பேச ஆரம்பித்தார். அவர் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில், பொதுக்கூட்ட மேடை அருகே 50 மீட்டர் தொலைவில் யாரும் எதிர் பாராதவிதமாக ‘டிரோன்’ ஒன்று அத்துமீறி வட்டமடித்தபடி பறந்தது.
புதுச்சேரி, பிப்ரவரி 15: தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரி மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட காரைக்காலில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் (பிப்.13) இரவு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சி வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காரைக்காலில் உள்ள அரிசி ஆலை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஹெலிபேட் மைதானத்திற்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்து இறங்கினார். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலமாக பொதுக்கூட்ட மேடைக்கு பகல் 12.10 மணிக்கு வந்தார். வழியெங்கிலும் அவருக்கு பாஜக தொண்டர்கள் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் படிக்க: தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லை.. மன்னிப்பு கேட்ட அமித் ஷா..
காரைக்காலில் ட்ரோன் பறக்க தடை:
இதனிடையே, அமித்ஷா வருகையையொட்டி துணை ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீஸார் என 1,500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் ‘ட்ரோன்’ பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இறைச்சி, மதுக்கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டு, இதனை மீறுபவர்கள் மீது, அது தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்:
இந்தநிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா சரியாக பகல் 12.30 மணியளவில் பேச ஆரம்பித்தார். அவர் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில், பொதுக்கூட்ட மேடை அருகே 50 மீட்டர் தொலைவில் யாரும் எதிர் பாராதவிதமாக ‘டிரோன்’ ஒன்று அத்துமீறி வட்டமடித்தபடி பறந்தது. இதை பார்த்த தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் உஷாராகி தான் வைத்திருந்த ‘டிரோன்’ எதிர்ப்பு துப்பாக்கி மூலம் அதனை சுட்டு வீழ்த்தினார். அந்த ‘ட்ரோன்’ அதே இடத்தில் கீழே விழுந்தது. உடனே அதனை கைப்பற்றினர்.
மேலும் படிக்க: பாஜகவின் புதுமையான பிரசாரம்.. வாசகமே கிடையாது.. வியந்த மக்கள்!!
பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை:
இது தொடர்பாக விசாரித்த போது, அதனை பறக்க விட்டது திருநள்ளாறு பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 27) என்பதும், அவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்ததும், பொதுக்கூட்ட மேடை எதிரே ஒரு கடையில் இருந்து ‘டிரோனை’ இயக்கியதும் தெரியவந்தது. அவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரோனை எதற்காக இயக்கினார் என்பது குறித்து அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. அமித்ஷா பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ‘டிரோன்’ சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.