தினமும் ரூ.10க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்… இன்று ரூ.681 கோடி வருவாய் ஈட்டும் தொழிலதிபர்- யார் இந்த முஸ்தபா?
Success Story : சிறுவயதில் தினமும் ரூ.10க்காக கூலி வேலை பார்க்கத் தொடங்கி, இன்று கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் இளைஞனாக வளர்ந்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த முஸ்தபா. பிரபல உணவு நிறுவனமான ஐடி ஃபிரெஷ் ஃபுட்டின் நிறுவனர். அவரது வெற்றிக் கதை குறித்து பார்க்கலாம்.
வாழ்க்கையில் வெற்றிபெற பெரிய குடும்ப பின்னணி அவசியமில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் கேரளாவை சேர்ந்த பி.சி.முஸ்தபா. ரூ.600 கோடி மதிப்பிலான ஐடி ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டு தந்தையுடன் கூலி வேலைக்கு சென்ற இவர், பின்னர் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் பயின்று ரூ.681 கோடி வருமானம் நிறுனத்தை உருவாக்கியிருக்கிறார்.
கேரளத்தில் வயநாடு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். அதனால் அவரால் தனது மகனை படிக்க வைக்க முடியவில்லை. இதற்கிடையில் முஸ்தபா தனது 6 ஆம் வகுப்பில் ஃபெயிலாகியிருக்கிறார். இதனையடுத்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது தந்தையுடன் காபி தோட்டத்துக்கு கூலி வேலைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.10 சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : இபிஎஃப்ஓ அமைப்பு வழங்கும் காப்பீடு.. ரூ.7 லட்சம் வரை பெறலாம்.. முழு விவரம்!




முஸ்தபாவின் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியர்
இந்த நிலையில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை தேடி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதை உறுதியாக கொண்டிருந்திருக்கிறார் ஒரு ஆசிரியர். அந்த வகையில் முஸ்தபா காபி தோட்டத்தில் வேலை பார்ப்பதை அறிந்து அவரை தேடி வந்திருக்கிறார். அப்போது தான் குடும்பத்தின் பொருளாதார நிலையால் முஸ்தபா படிப்பை நிறுத்தியது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து முஸ்தபாவின் பெற்றோரிடம் பேசிய அந்த ஆசிரியர் அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப சம்மதம் வாங்கியிருக்கிறார். மேலும் முஸ்தபா படிப்பதற்கான செலவுகளையும் அவரே ஏற்றிருக்கிறார். அந்த உதவி வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. அதுவரை படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாத முஸ்தபா அதன் பிறகு சிறப்பாக படித்திருக்கிறார். குறிப்பாக 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
அதன் பிறகு கோழிக்கோட்டில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நிர்வாகவியில் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த அவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி அவர், தனது உறவினர்களான அப்துல் நாசர், ஷம்சுதீன் டி.கே., ஜாபர் டி.கே. மற்றும் நவுஷாத் டி.ஏ. ஆகியோருடன் இணைந்து பெங்களூருவில் ஒரு சிறிய உணவுத் தொழிலைத் தொடங்கினார்.
ஐடி ஃபிரெஷ் ஃபுட் என்ற பெயரில் அவர் தொடங்கிய நிறுவனம், இட்லி மாவு விற்பனையை செய்யத் தொடங்கினார். பெங்களூரு போன்ற நகரங்களில் வேலைக்குச் செல்லும் குடும்பங்கள் பாரம்பரிய உணவான இட்லி, தோசையை விரும்பினாலும், அதற்கான மாவை வீட்டிலேயே தயாரிக்க போதிய நேரம் இல்லாமல் இருந்தது. இதனை அறிந்த அவர் இட்லி, தோசை மாவை தயாரித்து விற்கும் முடிவெடுத்தார். அது அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.
இதையும் படிக்க : RD, SIP மற்றும் PPF.. இவற்றில் எதில் ரூ.100 முதலீடு செய்வது சிறந்த லாபத்தை தரும்?
அன்று சிறிய அளவில் தொடங்கிய முஸ்தபாவின் முயற்சி படிப்படியாக மிகப்பெரிய உணவு நிறுவனமாக வளர்ந்தது.இட்லி, தோசை மாவு மட்டுமல்லாமல், புரோட்டா, பன்னீர், தயிர், சாம்பார், சட்னி, ஃபில்டர் காபி என படிப்படியாக பொருட்களை விற்பனையைத் தொடங்கினார். தற்போது ஐடி ஃபிரெஷ் ஃபுட் ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஓமன், கத்தார், அயர்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் விரிவடைந்துள்ளது.
ரூ.681 கோடியாக உயர்ந்த வருவாய்
ஒரு சிறிய சமையலறையில் தொடங்கிய நிறுவனத்தின் வளர்ச்சி தற்போது மிகப்பெரிய அளவுக்கு சென்றுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.681.38 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நிதியாண்டில் நிறுவனம் ரூ.50.75 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற எந்த பின்புலமும் தேவையில்லை நம் மனது வைத்தால் எவ்வளவு பெரிய லட்சியத்தையும் அடையலாம் என்பதற்கு முஸ்தபாவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.