“ஓணம் திருநாள் கொண்டாட்டம்!”.. குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
Guruvayur Temple Thiruvonam Rush: கேரளாவில் ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணத்தை முன்னிட்டு திருச்சூர் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஓணப்புடவை சமர்ப்பிப்பு, காழ்ச்ச சீவேலி மற்றும் 10,000 பேருக்கு வழங்கப்பட்ட பிரம்மாண்ட ஓணசத்யா பிரசாத விருந்துடன் திருவோணக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றன.
திருச்சூர், ஆகஸ்ட் 26: கேரள மாநிலத்தின் மிக முக்கியப் பாரம்பரியப் பண்டிகையான ஓணம் திருவிழாவின் 10-வது மற்றும் சிகர நாளான ‘திருவோணம்’ திருநாளை முன்னிட்டு, திருச்சூரில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகம் முழுவதும் வண்ணமயமான பூக்களங்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
திருவோண திருநாளான இன்று குருவாயூரப்பனுக்குச் சிறப்பான ‘ஓணப்புடவை’ சமர்ப்பிக்கும் சடங்குடன் வழிபாடுகள் கோலாகலமாகத் தொடங்கின. சாமானிய பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காகத் தேவஸ்வம் வாரியம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொது வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதுடன், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு மற்றும் வி.ஐ.பி தரிசனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.
வழக்கமான பூஜை முறைகளுடன் சிறப்பு ‘காழ்ச்ச சீவேலி’ மற்றும் யானைகள் பங்கேற்ற மேளதாள வாத்திய ஊர்வலங்களும் நடைபெற்றன. மேலும், திருவோண திருநாளைக் கொண்டாடும் வகையில் கோயிலின் அன்னலட்சுமி மண்டபத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்குப் பாயசம், அவியல், அடை, ஓலன் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளுடன் கூடிய பிரம்மாண்டமான ‘ஓணசத்யா’ பிரசாத விருந்து வழங்கப்பட்டது.
