‘டாக்ஸிக்’ தியேட்டர் ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் மூழ்கிய ரசிகர் கூட்டம்!
Yash Fans Celebration: 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடித்த 'டாக்ஸிக்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து, கர்நாடகாவின் சிக்பள்ளாப்பூர் திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். பல நகரங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் படம் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது.
கே.ஜி.எஃப் திரைப்பட வரிசைக்குப் பிறகு உலகளாவிய அளவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவான “டாக்ஸிக்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதனையொட்டி கர்நாடக மாநிலத்தின் சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் மிக பிரம்மாண்டமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாஷின் திரைப்படம் திரைக்கு வந்துள்ளதால், இன்று அதிகாலை முதலே திரையரங்க வளாகங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. சிக்பள்ளாப்பூர் திரையரங்குகளில் ‘டாக்ஸிக்’ படத்தின் முதல் காட்சிக்கு வந்த ரசிகர்கள், யாஷின் உருவம் தாங்கிய பிரம்மாண்டமான கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் திரையரங்கு வாசலில் மேள தாளங்கள் முழங்க, நாசிக் தோல்களின் தாளத்திற்கு நடனமாடியும், வண்ணமயமான பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், காங்ஸ்டர் கதைக் களத்தை பின்னணியாகக் கொண்டு மிகப் பிரம்மாண்டமான ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.
