கோவையில் உடல் நலக்குறைவால் பெண் யானை பரிதாப மரணம்
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கண்டியூர் வனப்பகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் ஆகஸ்ட் 24, 2026 நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 25, 2026 இன்று காலை யானையின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கண்டியூர் வனப்பகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் ஆகஸ்ட் 24, 2026 நேற்று மாலை பள்ளத்தில் பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்திருப்பது வனத்துறையினரின் ரோந்து பணியின் போது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜூக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை கோட்ட உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார்,வனக்கால்நடை மருத்துவர் வெண்ணிலா,உதவி மருத்துவர்(சாடிவயல்) பிரபு ஆகியோர் முன்னிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 3 முதல் 5 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனர். நீண்ட நேர சிகிச்சைக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி இன்றிரவு பெண் யானை பரிதாபமாக பலியானது.தொடர்ந்து இரவு வேளையாகி விட்டதால் இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. மேலும், ஆகஸ்ட் 25, இன்று காலை வன அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெறும் எனவும்,பிரேத பரிசோதனைக்கு பின்னரே யானை உயிரிழப்பிற்கான காரணம் முழுமையாக தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
