ஆதவ் அர்ஜூனா பேசாத வரை பேரவை அமைதியாக செல்கிறது.. அவர் பேச ஆரம்பித்தால்.. பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Criticizes Aadhav Arjuna Speech : தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசாத வரை அமைதியாக செல்கிறது, ஆனால், அவர் பேச ஆரம்பித்தால் வார்த்தை மோதல் ஏற்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. தெரிவித்து உள்ளார் .
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம் தொடங்கி உள்ளது. இதில், பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. பேசினார். அப்போது மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவே சட்டப்பேரவை நடைபெறுகிறது. ஆனால், கடந்த 4 நாட்களாக சட்டப்பேரவையில் தொடர்ந்து வாக்குவாதங்கள் தான் நடைபெற்று வருகின்றன. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதன் காரணமாக சட்டப்பேரவை நிகழ்வுகள் நீண்ட நேரம் நடைபெறுகின்றன. இதன் காரணமாக தமிழக மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டு விடப் போகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வுக்கு தயாராவதை போன்று பேரவையில் பேசுவதற்காக தயாராகி வருகின்றனர். ஆனால், தினம்தோறும் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசப்படுகிறது.
ஆதவ் அர்ஜூனா பேசாத வரை.. பேசிவிட்டால்
மற்ற நேரங்களில் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும், தேவையில்லாத வாக்குவாதங்களும் நடைபெறுகிறது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை கூட்டம் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அவர் பேசத் தொடங்கி விட்டால் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. பலமுறை நான் அவரிடம் சொல்லி விட்டேன்.
மேலும் படிக்க: அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!




சட்டமன்றம் சண்டை மன்றம் கிடையாது
இது சட்டமன்றம், சண்டை மன்றம் கிடையாது. எனவே, பேரவை தலைவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பேச அனுமதிக்க கூடாது. மேலும், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மக்கள் நலனுக்காக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், மக்களுக்காக தங்களால் முடிந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு தான் சட்டசபை உள்ளது. கருத்துக்களை 5 நிமிடம் பகிரலாம். ஆனால், மாலை 6:30 மணி வரை ஒருவரை ஒருவர் குறை சொல்வது, சண்டை போடுவது தான் சட்டப்பேரவையில் நடக்கிறது.
சட்டமன்றத்தின் மாண்பை புரிந்து கொள்ள வேண்டும்
தற்போது வரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்சியை சிறப்பாக செய்துள்ளனர். எனவே, உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களும் துணை நிற்கிறார்கள். சட்டப்பேரவையில் பேச வேண்டியதை தயார் செய்து வரும் எம்எல்ஏக்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. மக்களுக்காக பேசக்கூடிய இடம்தான் சட்டமன்றம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நேபாள நாட்டு வெள்ளத்தில் சிக்கி பிழைத்த 21 பேரின் விவரம்- புகைப்படம்.. இந்திய வெளியுறவுத்துறை வெளியீடு!