கோவையில் செல்ல பிராணிகள் விற்பனை கடையில் நாய்-பூனை திருட்டு! உரிமையாளர் உருக்கமான வேண்டுகோள்!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்லப் பிராணிகள் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாய் மற்றும் பூனை ஆகியவற்றை திருடி செல்லும் இரு இளைஞர்களின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக கடை உரிமையாளர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்ல பிராணிகள் விற்பனை கடையில் இருந்த நாய் மற்றும் பூனையை 2 இளைஞர்கள் திருடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக, செல்லப் பிராணிகள் விற்பனை கடையின் உரிமையாளர் உருக்கமான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் சாலையில் வளர்ப்பு பிராணிகள் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பட்ட பகலில் 2 இளைஞர்கள் வளர்ப்பு பிராணிகள் வாங்குவது போல வந்திருந்தனர். அவர்கள் கடையின் உரிமையாளரிடம் ஒவ்வொரு வளர்ப்பு பிராணிகள் குறித்தும், அவற்றின் விலை குறித்தும் விசாரித்தனர். இதற்கு, கடையின் உரிமையாளர் பதில் அளித்து வந்தார். அப்போது, கடை உரிமையாளரின் கவனத்தை அந்த இளைஞர்கள் திசை திருப்பி உள்ளனர்.
ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நாய்- பூனை திருட்டு
இதில், கடையின் உரிமையாளர் சற்று அயர்ந்த நேரத்தில், அந்த இரு இளைஞர்களும் கூண்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள நாய் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பூனை ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் சத்தம் போட்டவாறு அவர்களை பின் தொடர்ந்து ஓடினார். ஆனால், வெகு தூரம் ஓடிய நிலையில், அந்த இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மேலும் படிக்க: யானைக்கவுனியில் மரணக் கிணறு.. விஷவாயு தாக்கி தந்தை- மகன் பரிதாப பலி.. சென்னையில் பேரதிர்ச்சி!
சமூகவலைதளங்களில் வைரலாகும் திருட்டு வீடியோ
இந்தச் சம்பவம் பிராணிகள் வளர்ப்பு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாய் மற்றும் பூனை குட்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.
உரிமையாளர் உருக்கமான கோரிக்கை
காவல்துறை வழக்கு மற்றும் விசாரணை எதுவும் எனக்கு வேண்டாம். திருடி செல்லப்பட்ட எனது செல்ல நாய் மற்றும் பூனை பத்திரமாக மீண்டும் எனக்கு கிடைத்தால் மட்டும் போதும் என அந்த வீடியோவில் பேசி உள்ளார். உரிமையாளரின் இந்த உருக்கமான வேண்டுகோள் விடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: தியேட்டரில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கையை நீட்டிய இளைஞருக்கு ஈரோடு நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு!