யானைக்கவுனியில் மரணக் கிணறு.. விஷவாயு தாக்கி தந்தை- மகன் பரிதாப பலி.. சென்னையில் பேரதிர்ச்சி!
Chennai Father And Son Die : சென்னை மாவட்டத்தில் கிணற்றை தூர்வாருவதற்காக இறங்கிய தந்தை மற்றும் மகன் ஆ கியோர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக யானைக்கவுனி போலீசார் விசாரித்து வருகின்றனர் .
சென்னை மாவட்டம், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி ( 52 வயது). இவரது மகன் அய்யனார் ( 21 வயது). இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில், இன்று தந்தை, மகன் இருவரும் சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் அமைந்துள்ள சுமார் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதற்காக அய்யனார் கயிறு மூலம் கிணற்றின் அடிப்பகுதிக்கு இறங்கி சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் உள்ளே இருந்த விஷவாயுவை அவர் சுவாசித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். கிணற்றின் உள்ளே சென்ற தனது மகன் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததாலும், அவரது சத்தம் இல்லாததாலும் அவரது தந்தை ரவி அச்சமடைந்தார்.
மகனை மீட்க சென்ற தந்தையும் மயங்கினார்
உடனே, கிணற்றில் உள்ள எட்டி பார்த்தபோது, அய்யனார் விஷவாயு தாக்கி மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரவி, அவரை மீட்பதற்காக படபடவென்று கையிறை பிடித்து கிணற்றில் உள்ளே இறங்கி உள்ளார். இதில், எதிர்பாராத விதமாக கிணற்றின் அடிப்பகுதியில் அடர்த்தியாக பரவி இருந்த விஷவாயு ரவியையும் தாக்கிய நிலையில், அவரும் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே, அக்கம், பக்கத்தினர் இதை தொடர்பாக அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: சைபர் கிரைம்களால் அதிக நிதியிழக்கும் மாநிலங்கள் – தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?




மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இருவர் பலி
அதன்படி, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, ஆக்சிஜன் சிலிண்டர், முகமூடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சென்றனர். அங்கு, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, விஷவாயு தாக்கி மயங்கி கிடந்த ரவி மற்றும் அவரது மகன் அய்யனாரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரும் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
யானைக்கவுனி போலீசார் விசாரணை
இதைத் தொடர்ந்து, அவர்களது சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரவியின் குடும்பத்தினர்கள் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றை தூர் வாருவதற்காக எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும், முன்னெச்சரிக்கையும் இன்றி இறங்கிய இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: “மக்களே உஷார்!”.. தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்.. சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை!!