அக்டோபர் 1 முதல் UPI-ல் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.. NPCI திட்டவட்டம்!
UPI Collect Request Feature | யுபிஐ செயலிகளில் Collect Request அம்சம் பயன்பாட்டில் இருந்த நிலையில், அக்டோபர் 1, 2025 முதல் அந்த அம்சம் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெறும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான இந்திய பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிகின்றனர். யுபிஐ செயலிகளின் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 1, 2025 முதல் யுபிஐ செயலிகளில் வழங்கப்பட்டு வந்த ஒரு சேவை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payments Corporation of India) அறிவித்துள்ளது. அது என்ன சேவை, ஏன் ரத்து செய்யப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ செயலிகள்
இந்திய பொதுமக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு பரவலாக காணப்படுகிறது. எளிதாக பணம் அனுப்புவது, பணம் பெறுவது, இருப்பு சோதிப்பது என அனைத்து சேவைகளையும் மிக விரைவாக செய்து முடித்துவிட முடியும் என்பதால் பெரும்பாலான மக்களுக்கு இது மிக சிறந்த தேர்வாக உள்ளது. யுபிஐ சேவை இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையும், பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக் கடைகள் வரையும் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் மிக எளிமையாக உள்ளது.
இதையும் படிங்க : e PAN : இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!




யுபிஐ செயலியில் ரத்து செய்யப்பட உள்ள முக்கிய அம்சம்
யுபிஐ செயலியில் பல அட்டகாசமான அம்சங்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படும் நிலையில், தற்போது ஒரு முக்கியமான அம்சத்தை ரத்து செய்ய உள்ளதாக என்பிசிஐ கூறியுள்ளது. அதாவது பி2பி எனப்படும் (P2P – Peer-to-Peer) அம்சத்தை தான் ரத்து செய்ய உள்ளது. இந்த அம்சத்திற்கு Collect Request என்ற மற்றொரு பெயரும் உள்ளது.
Collect Request அம்சம் என்றால் என்ன?
இது ஒரு பயனரிடம் இருந்து பணம் பெறுவதற்காக அனுப்பப்படும் வேண்டுகோல் ஆகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெறும் நிலையில், இந்த அம்சத்தை கவிட என்பிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1, 2025 முதல் யுபிஐ செயலிகளான போன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட எந்த விதமான செயலிகளிலும் இந்த அம்சம் பயன்பாட்டில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.