தொடரும் பாலியல் குற்றங்கள்.. 60 வயது மூதாட்டியையும் விட்டுவைக்கவில்லை.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்!
Ranipet Old Woman Harassing : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா போதையில் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து 60 வயது மூதாட்டியை தாக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை ஆற்காடு போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், மகன், மகள்கள் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இதனால் மூதாட்டி மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி ( 23 வயது) என்ற இளைஞர் கஞ்சா போதையில் திடீரென மூதாட்டியின் வீட்டின் கதவை தட்டி உள்ளார். அப்போது, மூதாட்டி கதவை திறந்து என்ன வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு, அந்த இளைஞர் கஞ்சா போதையில் உளறி உள்ளார். உடனே, இங்கிருந்து செல்லுமாறு அந்த மூதாட்டி எச்சரித்துள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த அந்த இளைஞர் மூதாட்டியை வீட்டில் உள்ளே தள்ளி கதவை பூட்டிவிட்டு அவரிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக கூறப்படுகிறது.
கஞ்சா போதை உச்சத்தில் மூதாட்டி வன்கொடுமை
இதனால், அந்த மூதாட்டி அச்சத்தில் சத்தம் போட்டார். உடனே, அந்த இளைஞர் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி மூதாட்டியின் வாயில் வைத்து அமுக்கி சத்தம் போட முடியாமல் தடுத்துள்ளார். தொடர்ந்து, கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த இளைஞர் தட்சிணாமூர்த்தி மூதாட்டி என்றும் பாராமல் கொடூரமான முறையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூதாட்டி அலங்கோலமான நிலையில் கிடந்துள்ளார்.
மேலும் படிக்க: மறுவாழ்வு மையமா? மரண மையமா? நெல்லையில் சிறுவன் ரத்த காயங்களுடன் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை!




தலைமறைவான இளைஞர்
உடனே, அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட தட்சிணாமூர்த்தியை தேடி வந்தனர்.
இளைஞரை கைது செய்த போலீசார்
இதில், அவர் அந்த பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் உள்ளே இருந்த தட்சணாமூர்த்தியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் போலீசார் விசாரித்ததில் தவறை ஒத்துக்கொண்டார். இதை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: மயிலாடுதுறையில் கொடூரம்.. பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!