“பேரம் பேசிய தவெக மீது அதிரடிப் புகார்?”.. பழிவாங்கும் நடவடிக்கை.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
தற்போது திமுக முன்னாள் அமைச்சர்களான ஐ. பெரியசாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த வகையிலாவது வீழ்த்திவிடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைக்கு காவல்துறையை வைத்து விளையாடலாம் என்று நினைக்கிறார்கள்.
தூத்துக்குடி, ஜூலை 04: முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்று காலை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டார். முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் அரசுப் பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் குறித்து பொதுமேடையில் அவதூறாகப் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நிர்வாகிகளால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையொட்டி, அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆத்தூர் பேரூராட்சி ஆய்வுக்குச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
இதையும் படிக்க: தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
நீதிமன்ற நிபந்தனையும் ஜாமீன் விடுதலையும்:
இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் வெளிவந்துள்ள அனிதா ராதாகிருஷ்ணனுக்கு, ஆத்தூர் காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி 10 நாட்களுக்குக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல் நிலையத்தில் தனது கையெழுத்தைப் பதிவு செய்த பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகம் மீது புகார் அளிப்பது குறித்தும், திமுக தலைவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைகள் குறித்தும் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை”:
“நேற்று உங்களிடம் பேரம் பேசியதாகச் சொல்லியிருந்தீர்கள், அது குறித்து தவெக மீது ஏதேனும் புகார் அளிக்கப்படுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், “இது குறித்து திமுக தலைமையிடம் கேட்டு, எங்களுடைய வழக்கறிஞர்கள் குழுவினருடன் முழுமையாக ஆய்வு செய்த பின்னர், அவர்களின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கத்தி இருபக்கமும் கூர்மையானது:
தற்போது திமுக முன்னாள் அமைச்சர்களான ஐ. பெரியசாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த வகையிலாவது வீழ்த்திவிடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைக்கு காவல்துறையை வைத்து விளையாடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், கத்தி என்பது இரு பக்கமும் கூர்மையானது; அது எந்தப் பக்கமும் வெட்டும் என்பதை அவர்கள் காலத்தால் உணர்வார்கள்” என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
இதையும் படிக்க: கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!
ஸ்டாலின் லண்டன் பயணம் குறித்து மகிழ்ச்சி:
தனக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, ஆத்தூர் காவல் நிலையத்தில் 10 நாட்கள் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் வெளியில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், “எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இன்றைக்கு லண்டனுக்குச் சென்றுள்ளார். அவரை நேரில் சந்தித்து வழிஅனுப்ப முடியவில்லையே என்ற ஒரே ஒரு ஏக்கம் மட்டும்தான் எனக்குள் இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.