திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டி?.. விசிக-வின் ‘துணை முதல்வர்’ கணக்கு.. கிளம்பிய புதிய புயல்!!
அத்தீர்மானத்தில், "வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் நேரடியாகப் போட்டியிட வேண்டும். அவர் அங்கு போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று, ஆளும் அமைச்சரவையில் 'துணை முதலமைச்சராகப்' பொறுப்பேற்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலம், ஜூலை 04: தமிழக அரசியல் களத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகப் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்ட விசிக சார்பில் அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!
திருச்சி கிழக்கு காலியானது எப்படி?
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே அமோக வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுமுக-வின் இணிகோ இருதயராஜை விட சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றிருந்தார்.
சட்டப்படி ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் எம்.எல்.ஏ-வாக நீடிக்க முடியாது என்பதால், விஜய் தனது பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தால் இத்தொகுதி அதிகாரப்பூர்வமாகக் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தலை எதிர்நோக்கிக் காத்துள்ளது.
விசிக கூட்டத்தின் அதிரடித் தீர்மானம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்துப் பேசப்பட்டபோது, ஒரு சுவாரசியமான மற்றும் அதிரடியான தீர்மானம் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில், “வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் நேரடியாகப் போட்டியிட வேண்டும். அவர் அங்கு போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று, ஆளும் அமைச்சரவையில் ‘துணை முதலமைச்சராகப்’ பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
துணை முதல்வராகப் பங்கேற்க வேண்டும்:
இது குறித்து மேடையில் பேசிய விசிக மாவட்ட நிர்வாகி, “நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திருச்சி கிழக்கில் தலைவர் அவர்கள் விசிக சார்பில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் விருப்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம் ஆகும். அவர் அங்கு போட்டியிட்டு வென்று, ஆளும் அமைச்சரவையில் துணை முதல்வராகப் பங்கேற்று மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தையே நாங்கள் இங்கு தீர்மானமாகப் பிரதிபலித்துள்ளோம்” என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டார்.
திருமாவளவன் ஏற்கனவே அளித்த விளக்கம்:
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா அல்லது திருமாவளவன் களம் காண்பாரா என்ற விவாதங்கள் ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் எழுந்திருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பே மிகத் தெளிவாகவும், அதிகாரப்பூர்வமாகவும் ஊடகங்கள் வாயிலாக விளக்கம் அளித்திருந்தார்.
அரசியல் களம் உற்றுநோக்குவது என்ன?
கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்து, தான் போட்டியிடப் போவதில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள நிலையிலும், சேலம் மாவட்ட விசிகவினர் அவரைப் போட்டியிடக் கோரியும், அமைச்சரவையில் துணை முதல்வர் ஆக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
இதையும் படிக்க: தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தேர்தல் ஆணையம் வடமாநிலங்களில் சில தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தலை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் திருச்சி கிழக்கு உட்பட காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாகவே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்த நகர்வுகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.