“54 நாட்கள் தவெக ஆட்சி”.. ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் கொடுத்த ரகசிய லிஸ்ட்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!!
அரசுத் தரப்பு அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் எவ்வாறு பங்கேற்கலாம் என்பது குறித்தும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநரிடம் பாஜக புகார் அளித்துள்ளது. குறிப்பாக அரசு வழக்கறிஞர் பதவி நியமனங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை, ஜூலை 04: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்புதான் தமிழக ஆளுநர் டெல்லி சென்று மத்தியத் தலைவர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருந்தார். இந்தச் சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆளுநரைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
இதையும் படிக்க: தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆலோசிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள்:
இந்தச் சந்திப்பின் போது ஆளுநரிடம் பல்வேறு முக்கியப் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, தற்போதைய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 54 நாட்களேயான நிலையில், அதற்குள் 151 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகளும், 80-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன” என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் இதன் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
அமைச்சர்கள் மீதான புகார்கள்:
பெண் குழந்தைகளிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நடந்து கொண்ட விதம் குறித்து ஆளுநரிடம் பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது மற்றும் பீர் குடித்துவிட்டு கடலில் விழுந்தது போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிநபர்கள்:
அரசுத் தரப்பு அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் எவ்வாறு பங்கேற்கலாம் என்பது குறித்தும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநரிடம் பாஜக புகார் அளித்துள்ளது. குறிப்பாக அரசு வழக்கறிஞர் பதவி நியமனங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன என்றும், நிர்மல் குமார் என்பவர் மீதும் பல புகார்கள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிக்க: கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!
பாஜகவுக்கு அவசியம் இல்லை:
பாஜகவின் பின்னணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “பாஜக கட்சி என்பது அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலேயே மிகப்பெரிய கட்சியாகும். பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்குப் பல்வேறு திட்டங்கள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, பா.ஜ.க. யாருக்கும் பின்புலமாக இருந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.