“ஆட்டோவில் வருவதால் ID கார்டை காட்டினால் கூட MLA என நம்ப மாட்டார்கள்”.. அனுபவத்தை பகிர்ந்த தவெக MLA.. திரும்பி பார்த்த முதல்வர் விஜய்!!
Cars for Tamilnadu MLAs: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துப் பேசிய தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன், "கல்லூரி காலத்தில் காதல் தோற்றப்போ வேலையும் இல்லை, காரும் இல்லை; இன்று தலைவரால் இரண்டும் கிடைத்துள்ளது" என சுவாரஸ்யமாகப் பேசினார். வடசென்னை மருத்துவமனை உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு அமைச்சர்களும் நன்றி தெரிவித்தனர்.
சென்னை, ஆகஸ்ட் 19: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட பல்வேறு முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கும் திட்டம் ஆகியவை உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பேரவையில் நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், மக்கள் நலன் கருதி உடனடியாக நிறைவேற்றித் தரும் மனப்பான்மையோடு முதல்வர் செயல்படுவதாக உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த விவாதத்தின் போது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் 74% மரணங்களுக்கு காரணம் உடல் பருமன் – மக்கள் நல்வாழ்வுத்துறை அதிர்ச்சி தகவல்
எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது:
After facing Love failed in college, Chief Minister Joseph Vijay has now given me both a car and a job – Periyakulam tvk mla sabari pic.twitter.com/8yyIJ0GhEO
— Vignesh Theni (@Vignesh_twitz) August 19, 2026
விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், முதலமைச்சரின் கார் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துத் தனது கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் பேரவையில் நெகிழ்ச்சியையும் புன்னகையையும் வரவழைத்தது. “கல்லூரியில் படிக்கும் போது எனக்குக் காதல் தோல்வி ஏற்பட்டது. அப்போது கையில் வேலையும் இல்லை, ஏறிச் செல்ல காரும் இல்லை. ஆனால், இன்று எனக்கு மக்கள் சேவை செய்ய வேலையையும் கொடுத்து, பயணிப்பதற்கு காரையும் நமது தலைவர் வழங்கியுள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், சென்னைக்கு ரயில் மற்றும் ஆட்டோவில் வரும்போது பாதுகாப்பு காவலர்களிடம் அடையாள அட்டையைக் காண்பித்தாலும் எம்.எல்.ஏ என நம்ப மறுத்த சூழல் இனி மாறும் என்றும், விவசாயிகளும் எம்.எல்.ஏ-க்களும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியடையும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருப்பதாகவும் அவர் கூறினார். அப்போது, அந்த உறுப்பினர் பேசுவதை முதல்வர் விஜய் அதிர்ந்து திரும்பி பார்த்தது குறிப்பிடத்தக்கது.
இன்னோவா காராக வழங்கினால் நல்லது:
தொடர்ந்து பேசிய மற்றொரு உறுப்பினர் கல்லாணை, பால் உற்பத்தியாளர்களுக்கும், மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குக் கூடுதல் புற்றுநோய் பராமரிப்பு மையம் அமைத்துக் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். கடன் வாங்கி கார்களைப் பயன்படுத்தி வருந்திய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில், அரசு சார்பில் வழங்கப்படும் வாகனத்தில் சென்று தொகுதிப் பணியாற்றும்போது கிடைக்கும் கெத்து வேறு எதிலும் இருக்காது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட உறுப்பினர்கள், இந்த வாகனத்தை ‘இன்னோவா’ காராக வழங்கினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஜாலியாகக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க: வேகமாகக் குறையும் பிறப்பு விகிதம்..! ‘முதியோர் மாநிலமாக’ மாறும் தமிழ்நாடு.. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்!!
வாரி வழங்கும் முதலமைச்சர்:
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சமூகநலத்துறை அமைச்சர் வன்னிஅரசு, வடசென்னையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வடசென்னை மக்களின் நீண்டகால அவதியைத் தீர்க்கும் மகத்தான திட்டம் எனப் பாராட்டினார். மேலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வரம்பை உயர்த்தியது, விழுப்புரம் மண்டலப் புற்றுநோய் மையம் மற்றும் பால் கொள்முதல் தொடர்பான அறிவிப்புகள் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் கேட்காமலேயே தேவைகளை அறிந்து வாரி வழங்கும் முதலமைச்சராக அரசு செயல்பட்டு வருவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் பேரவையில் கூறினார்.