தென்காசியில் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர்.. கையும் களவுமாக தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!
Sivagiri Forest Range Officer Arrested : தென்காசி மாவட்டத்தில் அரசு ஓப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற சிவகிரி வனச்சரக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர் .
சென்னை மாவட்டம், பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( 45 வயது). இவர், அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருகிறார். இந்த நிலையில், தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால், இந்த பகுதிகளில் யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் நுழையாமல் தடுப்பதற்காக வனப்பகுதியை ஒட்டி சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு யானைகள் தடுப்பு அகழி அமைப்பதற்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த டெண்டரை சுரேஷ்குமார் எடுத்த நிலையில், யானைகள் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவன், சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து பில் தொகையில் சுமார் 30 சதவீதம் லஞ்சமாக தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெண்டர் தொகையில் 20 சதவீதம் லஞ்சம் கேட்ட வனச்சரகர்
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் லஞ்சம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்று செவ்வாய்க்கிழமை சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவனை நேரில் சந்தித்து குறைந்த விலை புல்லையில் டெண்டர் எடுத்துள்ளேன். அதனை பார்த்துவிட்டு பதில் கூறுமாறு தெரிவித்துள்ளார். அப்போது, வனச்சரகர் கதிரவன் சுமார் 20 சதவீதம் லஞ்சம் தர வேண்டும், இல்லையெனில் வேலை செய்ய அனுமதி வழங்கமாட்டேன். பில் பதிவு செய்யவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “இனிமேல் உங்களால் ஆட்சிக்கு வர முடியாது.. – அமைச்சர் ஆனந்த் பேச்சால் பரபரப்பு




ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார்
மேலும், ஏற்கனவே ரூ. 18,45,000- க்கு பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான 20% கமிஷன் தொகை ரூ.3,69,000- ஐ தந்துவிட்டு மீதமுள்ள பணிகளை முடியுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கும், சுரேஷ்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்த நிலையில், முதல் தவணையாக ரூ.1,00,000-ஐ தருமாறும், மீதி பணத்தை இறுதி பில் பதிவு செய்யும்போது தர வேண்டும் என்று கறாராக தெரிவித்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரூ. 1 லட்சத்தை பெற்ற போது கைதான வனச்சரக அலுவலர்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு ஒப்பந்ததாரர் சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ. 1 லட்சத்தை கொடுத்து வனச்சரக அலுவலர் கதிரவனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, அவர் இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 19- ஆம் தேதி) வனச்சரக அலுவலர் கதிரவன் வீட்டில் அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாலசுதர் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: சரவணபொய்கையில் உற்சாக குளியல் போட்ட தெய்வானை யானை – பக்தர்கள் மகிழ்ச்சி