தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!
Sholinghur MLA Kapil Case Filed : ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், சோளிங்கர் எம்எல்ஏ கபில் உள்ளிட்டோர் மீது சோளிங்கர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தியேட்டரில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படத்தை சோளிங்கர் எம்எல்ஏ கபில் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது, அவரிடம் யூடியூபர் சிவா என்பவர் திரைப்படம் குறித்து கருத்து கேட்பதற்காக மைக்கை நீட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, எம்எல்ஏ கபின் அவரை தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், யூடியூபர் சிவாவை தேடி கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற நாளிதழ் நிருபர் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சோளிங்கர் எம்எல்ஏ கபில் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சோளிங்கர் எம்எல்ஏ மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு
சுமார் 21 நாட்களுக்கு பிறகு சோளிங்கர் எம். எல். ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், எம்எல்ஏ கபில் மற்றும் அவரது சகோதரர் தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த தகவல் அறிந்து சோளிங்கர் போலீசார் விரைந்து சென்று செய்தியாளர்கள் உள்ளிட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இந்த சம்பவத்தை பதிவு செய்திருந்த செய்தியாளர்களின் செல்போனில் இருந்த வீடியோக்களை போலீசார் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்




எஸ்.பி. அலுவலகம்- காவல் நிலையத்தில் புகார் மனு
அத்துடன், இந்த சம்பவத்தை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சோளிங்கர் காவல் நிலையம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபினிடம் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், தற்போது சோளிங்கர் எம். எல். ஏ. கபில் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தன.
தவெகவினர் இடையே பெரும் பரபரப்பு
தமிழக வெற்றி கழக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே, பல்வேறு இடங்களில் தவெக எம்எல்ஏக்கள் குவாரி உரிமையாளர்களை மிரட்டுவதும், விவசாயிகளை மிரட்டுவதுமாக வீடியோக்கள் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சோளிங்கர் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும் படிக்க: பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!