அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது ஏன்… உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!
Speaker JCD Prabhakar : அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றது ஏன் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் அந்த கட்சியின் கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அவர்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் ஏற்றிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம். எஸ். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்றம் மீது அதிகபட்ச மரியாதை வைத்துள்ளேன். சட்டப்பேரவை செயலாளர் மூலமாக பதில் மூலம் தாக்கல் செய்ததில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை என்னிடம் சமர்ப்பித்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அளித்த விளக்கம்
சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்களா என ஒவ்வொருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, அதில் திருப்தி ஏற்பட்ட பிறகே அவற்றை ஏற்றுக் கொண்டேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடி ஆகும். எனவே, இதில் எந்த விதமான சட்ட விரோதமும் இல்லை என்பதால், மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது விசிக? தவெகவுடன் கூட்டணி தொடரும்.. தொல்.திருமாவளவன் அறிவிப்பு!




அதிமுக தரப்புக்கு அவகாசம் அளித்த நீதிமன்றம்
இந்த வழக்கு விசாரணையின் போது, சபாநாயகர் மனுவுக்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி சபாநாயகர் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்வதற்காக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்ததுடன், செப்டம்பர் 1- ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர். முன்னதாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அதிமுக எம்எல்ஏக்கள் சுய விருப்பத்தின் பேரில், ராஜினாமா செய்தார்களா என சபாநாயகர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.
அதிமுக தரப்பு வழக்கறிஞர் வாதம்
அத்துடன், வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும், சபாநாயகர் வழக்கை எதிர்கொள்ளவில்லை என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், சபாநாயகர் பிரபாகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சட்டப்பேரவை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானது என்பதால், தனியாக பதில் மனு தாக்கல் செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!