தவெக எம்எல்ஏக்கள் பேரம் விவகாரம்… விசாரணையில் சிக்கும் செந்தில் பாலாஜி- அசோக் குமார்.. போலீசார் சம்மன்!
TVK MLAs Horse Trading Issue: தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற திங்கள்கிழமை ஆஜராகுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏவான இளையராஜாவிடம் திமுகவை சேர்ந்த சிலர் ரூ.35 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின், அரசியல் வியூக நிறுவனத்தை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தன்னிடம் தொடர்பு கொண்டு சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும், அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும், இதற்காக ரூ.35 கோடி தருவதாகவும் கூறியதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்தில்பாலாஜி- அசோக்குமாருக்கு போலீசார் சம்மன்
இந்த நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் எம்எல்ஏக்கள் பேரம் விவகாரத்தில் தொடர்புடையதாக திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்மனை கரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராமேஸ்வரன்பட்டியில் உள்ள அவரது பூர்விக வீட்டில் நேரடியாக அளிப்பதற்கு போலீசார் சென்றனர்.
மேலும் படிக்க: வீடி புகுந்து தாக்கிய வழக்கு.. அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாததால் நீதிபதி ஆவேசம்.. புதுச்சேரி நீதிமன்றம் ஸ்ட்ரிட் உத்தரவு!




செந்தில்பாலாஜி தந்தையிடம் சம்மனை படித்த போலீசார்
அங்கு, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இல்லாத காரணத்தால், அவரின் தந்தை வேலுச்சாமியிடம் சம்மனை போலீசார் அளித்தனர். அப்போது, அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதை போலீசார் படித்து காண்பித்தனர். அதன்படி, வருகிற ஜூலை 6- ஆம் தேதி ( திங்கள்கிழமை) திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகிய இருவரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை கேட்டுக் கொண்ட செந்தில் பாலாஜியின் தந்தை மற்றும் தாய் அந்த சம்மனில் கையெழுத்திட்டு அதை பெற்றுக் கொண்டனர்.
செந்தில்பலாஜிக்கு தெரியபடுத்துவதாக தகவல்
தொடர்ந்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் எங்களை தொடர்பு கொண்டால் இந்த சம்மன் விவகாரம் தொடர்பாக அவர்களுக்கு தெரிவிப்பதாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அசோக் குமார் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுகவுக்கு தொடர் சறுக்கல்.. அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைகள்.. பொன் ஜெயசீலன் வெளியேறினார்!