மறுவாழ்வு மையமா? மரண மையமா? நெல்லையில் சிறுவன் ரத்த காயங்களுடன் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை!
Rehabilitation Center Boy Died : நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையத்தில் இருந்த 17 வயது சிறுவன் மர்மமான முறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் சாந்த பிரபு. இவரது மூத்த மகன் ரத்தினசாமி ( 17 வயது). இவர், கடந்த சில நாட்களாக பெற்றோரிடம் பைக் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அத்துடன் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரத்தினசாமிக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக விக்கிரமசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜூன் 9- ஆம் தேதி சாந்த பிரபு சேர்த்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று ரத்தினசாமிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி மறுவாழ்வு மையத்தினர் அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்த போது, ரத்தினசாமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர், அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, இரத்தின சாமியின் தந்தை சாந்த பிரபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுவனின் உடலில் ரத்த காயம்
அதன் பேரில், மருத்துவமனைக்கு வந்த சாந்த பிரபு தனது மகனை பார்த்தார். அப்போது, அவரது இரண்டு கைகளிலும் கயிறால் கட்டப்பட்ட தடமும், உடலில் ரத்த காயங்களும் இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சாந்த பிரபு கடும் ஆத்திரத்தில் மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, சாந்த பிரபு விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் தனது மகனை சித்திரவதை செய்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சிறுவயது மகனுக்கு மது ஊற்றி கொடுத்த தந்தை… வீடியோ வைரலானதால் கம்பி எண்ணிய தகப்பன்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!




மறுவாழ்வு மையத்தில் போலீசார் அதிரடி விசாரணை
இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட மறுவாழ்வு மையத்துக்கு போலீசார் நேரடியாக சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுவன் ரத்தினசாமி உடன் தங்கியிருந்த பிற நபர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மறுவாழ்வு மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக
இருந்தாலும், மறுவாழ்வு மையத்தில் இருந்த சிறுவன் திடீரென உடல்நலக் குறைவால் உயிர் இழந்த சம்பவமும், அந்த சிறுவனின் உடலில் ரத்த காயங்கள் இருந்தது சந்தேகத்தை எழுப்புகிறது. இதனால், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கை வந்த பின்னரே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: சிவகங்கையில் பரபரப்பு.. காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ. மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அதிரடி கைது!