குமரி அணுக்கனிம திட்டம்.. “மக்களுக்கு விரோதமாக ஒருபோதும் அரசு செயல்படாது”.. அமைச்சர் டி.கே.பிரபு உறுதி!
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். அவர் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்குத் தமிழக அரசு என்றும் மதிப்பளிக்கும். மக்களுக்கு விரோதமான அல்லது உள்ளூர் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார் என்று கூறினார்.
சென்னை, ஜூலை 04: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டம் தொடர்பாகக் கடலோரக் கிராம மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், “மக்களின் நலனுக்கு எதிராகத் தமிழக அரசு எவ்விதமான முடிவையும் எடுக்காது” என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுத்துப் பிரிப்பதற்கான அனுமதி நீட்டிப்பு தொடர்பாகத் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. அந்த அரசாணையில், மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்தத் திட்டத்தைத் தொடரலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: சிவகங்கையில் பரபரப்பு.. காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ. மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அதிரடி கைது!
இந்த அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், மீனவ மக்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கடலோரக் கிராம மக்கள் மற்றும் உள்ளூர் சங்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை:
மக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் கடலோரக் கிராம மக்கள் சென்னைக்கு வந்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபுவை நேரில் சந்தித்தனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அவசரச் சந்திப்பின் போது, தமிழக நிதியமைச்சர் மரிய வல்சன், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் துறை சார்ந்த முதன்மைச் செயலாளர்கள் பலரும் உடனிருந்தனர். குமரி மாவட்ட மக்களின் அச்சங்களையும், சுற்றுச்சூழல் ரீதியான பாதிப்புகளையும் பிரதிநிதிகள் அமைச்சர்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
“முதலமைச்சரின் உத்தரவு இதுதான்”:
மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் டி.கே. பிரபு, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். அவர் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்குத் தமிழக அரசு என்றும் மதிப்பளிக்கும். மக்களுக்கு விரோதமான அல்லது உள்ளூர் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது என்று மாண்புமிகு முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். அவரது ஆணைக்கிணங்கவே இந்த உறுதிமொழி வழங்கப்படுகிறது.”
மேலும், “அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் விவகாரத்தில், அங்குள்ள சுற்றுச்சூழலுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ லேசான பாதிப்பு ஏற்படும் என்ற நிலை இருந்தாலும், அரசு அந்தத் திட்டத்தை முன்னெடுக்காது. எதிர்காலத்தில் எந்தவொரு முடிவு எடுக்கப்பட்டாலும், அது உள்ளூர் மக்களை முழுமையாகத் திரட்டி, அவர்களுடன் முறையாகக் கலந்தாலோசனை செய்து, அவர்களின் ஒப்புதலோடு மட்டுமே எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இதையும் படிக்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
நிம்மதியில் கடலோர கிராமங்கள்:
நிதியமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் என மூன்று முக்கிய அமைச்சர்கள் ஒன்றிணைந்து, துறைச் செயலாளர்கள் முன்னிலையில் இந்த உறுதியை வழங்கியிருப்பது, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர மக்களிடையே இருந்த நீண்டநாள் அச்சத்தைப் போக்கியுள்ளது. அரசின் இந்த வெளிப்படையான அறிவிப்புக்கு உள்ளூர் மக்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.