சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி.. தற்போதைய நிலை என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்புதான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணையும் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, ஜூலை 03: பாமக நிறுவனரும், தமிழக அரசியலின் மூத்த தலைவருமான மருத்துவர் ராமதாஸ் (86) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை குறித்து பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. இச்செய்தி பாமக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கட்சியில் புதியவர்களுக்கு பொறுப்பு.. அதிரடி முடிவு எடுத்த CM விஜய்.. பனையூரில் நடக்கப்போகும் முக்கிய திருப்பம்!
வழக்கமான பரிசோதனைக்காக அனுமதி:
வயது மூப்பு காரணமாக, கடந்த சில நாட்களாகவே லேசான உடல் சோர்வு மற்றும் ரத்த அழுத்த மாறுபாடுகள் காரணமாக ராமதாஸ் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக அவருக்கு ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் வழக்கமான உடல் பரிசோதனைகளின் ஒரு பகுதியாகவே இந்த அனுமதி அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவர்கள் தகவல்:
மூத்த இருதயவியல் நிபுணர்களின் நேரடித் தீவிர கண்காணிப்பில் அவருக்குப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அவரது உடல்நிலை முற்றிலும் சீராக உள்ளதாகவும், பரிசோதனைகள் முடிந்து இன்னும் ஓரிரு நாட்களில் அவர் தைலாபுரம் இல்லம் திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், பாமக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டது.
கடந்த ஏப்ரல் மாத அதிர்ச்சியும், பின்னணியும்:
கடந்த ஏப்ரல் மாதத்தில் (2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது), சேலம் பள்ளப்பட்டியில் வேட்பாளர் அருளை ஆதரித்து பிரசாரம் செய்து முடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கும்போது, கடுமையான கோடை வெயில் மற்றும் அலைச்சல் காரணமாக மருத்துவர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது சேலம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவரது உடல்நிலையை குடும்பத்தினரும் மருத்துவர்களும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அந்த சமயத்தில், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தான் மருத்துவமனையில் இருந்தபோது அன்புமணியோ, அவரது குடும்பத்தினரோ தன்னை வந்து பார்க்கவில்லை என்று ராமதாஸ் தேர்தல் சமயத்தில் உருக்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் படிக்க: 3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!
சமீபத்திய குடும்ப நிகழ்வு:
இந்த குடும்ப விரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த சில நாட்களுக்கு முன்புதான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணையும் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து தற்போது ராமதாஸ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.