3 லட்சம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி.. பரிசீலனையில் 3 லட்சம் கார்டுகள்.. எப்போது வழங்கப்படும்!
Ration Cards: தமிழகத்தில் 3 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் 3 லட்சம் ரேஷன் அட்டைகள் பரிசீலனையில் உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சுமார் 34,911 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, விலை இல்லா சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இலவச பொருட்களை சுமார் 2 கோடியே 28 லட்சத்து 41 ஆயிரத்து 335 குடும்ப அட்டைதாரர்கள் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு மக்களின் அடிப்படை உரிமையாகவும், அரசு அடையாள அட்டையாகவும் கருதப்படுவதால் திருமணமான புதிய தம்பதிகள் உடனடியாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், ரேஷன் அட்டைகள் மூலமாகவே அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுவதன் காரணமாக இதற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அத்துடன், பொங்கள் திருநாளில் இலவச வேஷ்டி மற்றும் சேலை, ரொக்க பரிசு மற்றும் சிறப்பு திட்டத்தொகை ஆகியவை இதன் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
புதிய அரசு அமைந்தும் ரேஷன் அட்டை விநியோகமில்லை
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த டிசம்பர் 16- ஆம் தேதி முதல் புதிய அட்டை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், புதிய அட்டை கோரி தினமும் ஏராளமானோர் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வரும் நிலையில் தேர்தல் காரணமாக மார்ச் 31- ஆம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைந்து முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்னரும் தற்போது வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
மேலும் படிக்க: தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!




ரேஷன் அட்டைக்காக 6 லட்சம் பேர் விண்ணப்பம்
இதில், கடந்த 6 மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் பேர் வரை புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில், சுமார் 21 ஆயிரம் மனுக்கள் தவிர மற்ற அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசீலனையில் உள்ளது. இது தவிர ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மேலும் 3 இலட்சம் விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன.
7 வழிகாட்டு நெறிமுறைகள்
இது தொடர்பாக துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது 3 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அட்டைகள் எப்போது விநியோகம் செய்யப்படும் என்பது அரசின் முடிவாகும். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை விண்ணப்பித்த படிவங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது குறித்து 7 வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன் அடிப்படையில் புதிய ரேஷன் கார்டுகளை முதல்வர் விஜய் வழங்குவாரா அல்லது வழக்கம்போல அலுவலகத்திலேயே வழங்கப்படுமா என்பது செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: தடுப்புக்கட்டையில் மோதிய கார்.. விழுப்புரம் அருகே நிகழ்ந்த கோர விபத்து.. சென்னையை சேர்ந்த இருவர் மரணம்!